சிங்கப்பூரில் 5 வயது முதல் 11 வயது வரைப்பட்ட சிறார்களுக்கு ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியைப் போடலாமா, வேண் டாமா என்பது பற்றி இம்மாதப் பிற்பகுதியில் வல்லுநர் குழு முடிவு செய்யும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்து இருக்கிறார்.
அமெரிக்காவில் இதே வயதுள்ள சிறார்களுக்கு ஃபைசர் தடுப்பூசியைப் போடலாம் என்று அமெரிக்க உணவு, மருந்து நிர்வாக அமைப்பு அண்மையில் அங்கீகாரம் வழங்கியது.
அதையடுத்து திரு ஓங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அமைச்சர், ஃபைசர் நிறுவனம் மருந்தக சோதனைகளை நடத்தி 5 முதல் 11 வயது வரைப்பட்ட சிறார்களுக்கு, பெரியவர்களுக்கான ஊசி மருந்தில் மூன்றில் ஒரு பங்கைப் பரிந்துரைத்தது என்பதையும் அதையடுத்து அமெரிக்க உணவு, மருந்து நிர்வாக அமைப்பு இதன் தொடர்பில் முடிவு எடுத்ததாகவும் குறிப்பிட்டார்.
கொவிட்-19 தடுப்பூசி தொடர்பான சிங்கப்பூரின் வல்லுநர்கள் குழு, அமெரிக்க ஆய்வு பற்றிய தகவல்களை ஆராய்ந்தது.
ஒட்டுமொத்தமாக 5 முதல் 11 வயது வரைப்பட்ட சிறாருக்குத் தடுப்பூசி போடுவது நன்மையளிக்கும் ஒரு நடைமுறை என்று அது மதிப்பிட்டு உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்தொடர்பில் சுகாதார அமைச்சு, ஆய்வு ஒன்றை நடத்தும் என்றும் அமைச்சர் ஓங் தெரிவித்தார்.