சிங்கப்பூரில் நேற்று திங்கட்கிழமை (08-11-2021) புதிதாக 2,470 பேர்க்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டது. இது, அதற்கு முந்திய நாளைக் காட்டிலும் 83 குறைவு.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை 0.81ஆக இருந்த வாராந்திர கிருமித்தொற்று உயர்வு விகிதம், நேற்று 0.84ஆக உயர்ந்தது.
இவ்விகிதம் ஒன்றுக்குமேல் இருந்தால் கிருமித்தொற்று இன்னும் அதிகரித்து வருவதாகப் பொருள்.
தொடர்ந்து ஆறாவது நாளாக இவ்விகிதம் ஒன்றுக்குக் கீழ் பதிவாகி இருக்கிறது.
புதிதாக பாதிக்கப்பட்டோரில் 2,307 பேர் சமூகத்தில் இருப்போர், 156 பேர் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள், எழுவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்.
இதனையடுத்து, சிங்கப்பூர் கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 220,803 ஆனது.
இதற்கிடையே, 56 முதல் 98 வயதிற்குட்பட்ட மேலும் 14 பேர் கிருமித்தொற்றால் உடல்நிலை மோசமடைந்து இறந்துவிட்டனர். இதனையடுத்து, கொரோனாவால் மாண்டோர் எண்ணிக்கை 511 ஆனது.
நேற்று முன்தினம் 69.9 விழுக்காடாக இருந்த தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைப் பயன்பாட்டு விகிதம், நேற்று 68.5 விழுக்காடாகக் குறைந்தது.