சில ஆப்பிரிக்க நாடுகளில் தலைதூக்கியுள்ள உருமாறிய கொவிட்-19 கிருமி வகைக்கு (பி1.1.529) உலக சுகாதார நிறு
வனம் ஓமிக்ரான் என்று பெயரிட்டுள்ளது. ஓமிக்ரான் என்பது கிரேக்க மொழியின் 15வது எழுத்தாகும். இந்த வகை கிருமியால் பொதுமக்களின் உடல்நலத்துக்கு ஆபத்து ஏற்படும் சாத்தியம் உள்ளதாக அது எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஓமிக்ரான் கிருமி வகை மற்ற கொவிட்-19 கிருமி வகையைவிட வேகமாகப் பரவக்கூடியதா, உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியதா, தடுப்பூசியைக் கொண்டு அதை முறியடிக்கலாமா என்பதை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் விரைகின்றனர்.
தென்னாப்பிரிக்காவின் கௌடெங் மாநிலத்தில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில் ஏறத்தாழ 90 விழுக்காட்டினர் ஓமிக்ரான் கிருமி வகையால் நோய்வாய்ப்பட்டுள்ளனர். இந்தப் புதுவகைக் கிருமியால் தென்னாப்பிரிக்காவில் திடீரென்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மளமளவென அதிகரித்துள்ளது.
தென்னாப்பிரிக்க மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 24 விழுக்காட்டினர் மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். ஆப்பிரிக்க கண்டத்தின் மக்கள்தொகையில் நான்கு விழுக்காட்டினர் மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
நேற்று முன்தினம் நிலவரப்படி தென்னாப்பிரிக்காவைத் தவிர்த்து மற்ற நாடுகளில் குறைந்தது எட்டு பேருக்கு ஓமிக்ரான் கிருமி தொற்றியருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் நால்வருக்கும் ஹாங்காங்கில் இருவருக்கும் இஸ்ரேலிலும் பெல்ஜியத்திலும் தலா ஒருவருக்கும் ஓமிக்ரான் கிருமியால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மையில் தென்னாப்பிரிக்கா, மலாவி, எகிப்து ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொண்டவர்கள் மூலம் ஹாங்காங், இஸ்ரேல், பெல்ஜியம் ஆகிய நாடுகளில் ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஓமிக்ரான் பற்றிய செய்திகள் வெளியானது பல அரசாங் கங்களுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பயணக் கட்டுப்பாடுகளைப் பல நாடுகள் கடுமையாக்கியுள்ளன. அதுமட்டுமல்லாது, நிதிச் சந்தைகளும் பாதிப்படைந்துள்ளன.
இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் உள்ள சுற்றுப்பயணிகள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப ஜோகன்னஸ்பர்க் அனைத்துலக விமான நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் பயணிகளுக்கு பல நாடுகள் தடை விதிக்க இருக்கின்றன. தடை நடப்புக்கு வருவதற்கு முன்பு எப்படியும் சொந்த நாடு திரும்பிவிட வேண்டும் என்று பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு விமான நிலையத்துக்குப் பலர் விரைந்துள்ளனர்.
தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் விமானங்களுக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது. அமெரிக்கா, கனடா ஆகியவற்றுடன் பல ஐரோப்பிய நாடுகளும் அதே நடவடிக்கையை எடுத்துள்ளன.
இதற்கிடையே, தென்னாப்பிரிக்காவிலிருந்து இரண்டு விமானங்கள் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரை நேற்று அடைந்ததாக நெதர்லாந்து சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த விமானங்களில் பயணம் செய்த ஏறத்தாழ 600 பேரில் பலருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு ஓமிக்ரான் கிருமி தொற்றியுள்ளதா என்பதை கண்டறிய பரிசோதனை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அந்த ஏறத்தாழ 600 பயணிகளில் 85 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என்று பரிசோதனையின் ஆரம்பகட்ட முடிவுகள் தெரிவிப்பதாக நெதர்லாந்து சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் அனைத்து விமானங்
களுக்கும் நெதர்லாந்து நேற்று தடை விதித்தது.
புதுவகை கொவிட்-19 கிருமி வகையால் உலகளாவிய நிலையில் பதற்றம் நிலவிவரும் நிலையில், நியூயார்க்கில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் தற்போதைய கொவிட்-19 நடைமுறைகளை மாற்ற வேண்டுமா என்பதை தீர்மானிக்க ஓமிக்ரான் கிருமி வகை தொடர்பாக கூடுதல் தகவல்கள் தேவை என்று உள்ளூர் நிபுணர்களான பேராசிரியர் டியோ யிக் யிங், சூ லீ யாங் ஆகிய இருவரும் ஸட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தனர்.