நாடாளுமன்றத்தில் பொய் கூறியதற்காக முன்னாள் மன்ற உறுப்பினர் ரயீசா கான் மீதான புகாரை விசாரித்துவரும் உரிமைக் குழு அதன் பணியைத் தொடர்ந்து செய்யும்.
நாடாளுமன்ற அலுவலர் இன்று புதன்கிழமை (டிசம்பர் 1) தமது அறிக்கையில் இதைத் தெரிவித்தார்.
உரிமைக் குழு உரிய நேரத்தில் அதன் அறிக்கையை நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்கும் என்றும் மன்ற அலுவலர் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக திருவாட்டி ரயீசா நேற்று இரவு 10.47 மணிக்கு நாடாளுமன்ற நாயகர் டான் சுவான்-ஜின்னுக்கு கடிதம் அனுப்பினார்.
திருவாட்டி ரயீசாவின் பதவி விலகல் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று தெரிவிக்கப்பட்டது.
திருவாட்டி ரயீசா, கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் செங்காங் குழுத்தொகுதியில் வெற்றி பெற்ற பாட்டாளிக் கட்சி அணியில் ஒருவர் ஆவார்.
நாடாளுமன்ற விவகாரங்களின் தொடர்பில் மன்ற உறுப்பினர்களின் நடத்தையையும் மற்றவர்களின் நடத்தையையும் நாடாளுமன்றச் (சலுகைகள், விலக்குகள், அதிகாரங்கள்) சட்டம் முறைப்படுத்துவதாக மன்ற அலுவலர் கூறினார்.
அந்தச் சட்டத்தின்கீழ், அறிக்கை முடிக்கப்படும் முன்பு எந்நேரத்திலும் எந்த நபரும் உரிமைக் குழுவிடம் சாட்சியம் அளிக்கும்படி அழைக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி நடந்த நாடாளுமன்ற விவாதத்தின்போது, பாலியல் வன்முறைத் தாக்குதலுக்கு உள்ளான பெண் ஒருவரின் புகாரை போலிசார் தவறாகக் கையாண்டதாக திருவாட்டி ரயீசா கூறியிருந்தார்.
அந்தப் பெண்ணுடன் தானும் சென்றதாகவும் அவர் அப்போது கூறினார்.
ஆனால் அப்படி ஒரு சம்பவம் நிகழவில்லை என்றும் தாம் பொய் கூறியதாகவும் அவர் நவம்பர் 1ஆம் தேதி ஒப்புக்கொண்டார்.
திருவாட்டி ரயீசா நேற்று இரவு பாட்டாளிக் கட்சியிலிருந்து விலகினார்.
பாட்டாளிக் கட்சி அந்த விவகாரம் பற்றிய மேல்விவரம் அளிக்க இன்று (டிசம்பர் 1) செய்தியாளர் கூட்டத்தை நடத்தும்.