மூன்றடி உயரமே இருக்கும் கட்டிபள்ளி சிவலால், 42, இந்தியாவில் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் குள்ள மனிதர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ஹைதராபாத் நகரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் திரு சிவலாலுக்குத் தமது உயரம் காரணமாக பயணம் செய்வது நாளுக்கு நாள் சிரமமாக இருந்தது. அதனால், தற்சார்புடன் இருக்க வேண்டிய தேவையை இவர் உணர்ந்தார்.
"முன்னெல்லாம், என்னால் வண்டி ஓட்ட முடியாது என்பதால் பொதுப் போக்குவரத்தையும் டாக்சிகளையும் நம்பியிருக்க வேண்டி இருந்தது. அவ்வாறு செல்லும்போது டாக்சி டிரைவர்கள், வழிப்போக்கர்களில் சிலர் என்னைப் பார்த்து கிண்டல் செய்வர். அதனால், எப்படியேனும் கார் ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவுசெய்தேன்," என்றார் திரு சிவலால்.
அமெரிக்காவில் குள்ள மனிதர் ஒருவர் காரோட்டும் காணொளியைப் பார்த்த பிறகு தம்மாலும் வாகனம் ஓட்ட முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது என்றார் இவர்.
அதன் இயக்கமுறையைப் பற்றி அறிந்துகொள்ள இவரும் அமெரிக்கா சென்றார்.
கார் ஓட்டுவது தம்மால் முடியாத செயலல்ல என்பதை அறிந்து கொண்ட பிறகு, வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டபடி காரை வடிவமைத்துத் தரும் ஒருவரை ஹைதராபாத்தில் திரு சிவலால் சந்தித்தார்.
"என்னுடைய கால்களுக்கு எட்டும் வகையில் 'மிதிகட்டையை' உயர்த்தி அமைத்தேன். ஆனாலும், பல்வேறு காரணங்களைச் சொல்லி, ஹைதராபாத்தில் உள்ள ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் பலவும் எனக்கு கார் ஓட்டக் கற்றுத்தர மறுத்துவிட்டன," என்று வருத்தத்துடன் கூறினார் இவர்.
இருப்பினும், இஸ்மாயில் என்ற தம் நண்பரின் துணையுடன் ஒருவழியாக இவர் கார் ஓட்டக் கற்றுக்கொண்டார்.
இப்போது தம் மனைவிக்கு கார் ஓட்டக் கற்றுக்கொடுத்துவருகிறார் திரு சிவலால்.
குள்ள மனிதர்கள் பிறரை நம்பியிராமல் தற்சார்புடன் இருக்க உதவ வேண்டும் என்ற நோக்கத்தில், அவர்களுக்கென சிறப்பு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி ஒன்றைத் தொடங்கவும் இவர் திட்டமிட்டு வருகிறார்.
"என்னைப் போன்றோர் கார் ஓட்டக் கற்றுக்கொண்டு, தற்சார்புடன் திகழ மாநில அரசு ஆதரவு வழங்க வேண்டும்," என்று இவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
'கியர்' இல்லாத இவரது காருக்கு தெலுங்கானா அரசு அனுமதி வழங்கியுள்ளது.