இரண்டாவது ஆண்டாக தைப்பூசத் திருவிழாவின்போது பக்தர்கள் நடை ஊர்வலம் செல்லவும் காவடி எடுக்கவும் அனுமதி இல்லை.
அடுத்த மாதம் 18ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொண்டாடப்படவுள்ள நிலையில், முழுமையாக கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மட்டுமே அந்த விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
பக்தர்கள் பால்குட வேண்டுதலை நிறைவேற்றலாம். அதுவும், கோவிலில் முன்னரே தயார்செய்து வைக்கப்பட்டுள்ள பால்குடங்களை மட்டுமே அவர்கள் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாண்டைப் போலவே, சிராங்கூன் ரோடு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் இருந்து தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோவில் வரைக்கும் பக்தர்கள் நடை ஊர்வலம் செல்ல அனுமதியில்லை.
கோவிலுக்குள்ளும் அதனைச் சுற்றியுமே தைப்பூசம் சார்ந்த நடவடிக்கைகள் இடம்பெறும்.
இவ்விரு கோவில்களும் இந்து அறக்கட்டளை வாரியமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இவ்விவரங்கள் இடம்பெற்று உள்ளன.
அருள்மிகு தெண்டாயுதபாணி கோவிலுக்குச் சென்று, இறைவனைத் தரிசிக்க விரும்பும் பக்தர்கள் அதற்கான நேரத்தை இணையம் வழியாக முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். கோவிலுக்கு வெளியே பக்தர்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட வழியைப் பயன்படுத்த வேண்டும். வேண்டுதலையும் இறை தரிசனத்தையும் முடித்தபின் அவர்கள் கோவிலைவிட்டு வெளியேறிவிட வேண்டும்.
எல்லா நேரங்களிலும் அவர்கள் பாதுகாப்பு இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்; முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
உலகம் புதிய கொரோனா அலைகளை எதிர்கொண்டுவரும் வேளையில் இந்தக் கட்டுப்பாடுகள் தேவை என்று விழா ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் டிரேஸ்டுகெதர் கருவி அல்லது செயலியைப் பயன்படுத்த வேண்டும்.
கூடுதல் விவரங்கள் தைப்பூசத் திருவிழா நெருங்கும் வேளையில் வெளியிடப்படும்.
மலேசியா: ரத ஊர்வலம் இல்லை
இதனிடையே, புதுவகை 'ஓமிக்ரான்' கொவிட்-19 கிருமி அச்சுறுத்தலால் மலேசியாவில் தைப்பூசத்தின்போது வெள்ளி ரத ஊர்வலத்திற்கும் சிங்கே அணிவகுப்பிற்கும் அனுமதி இல்லை என்று அந்நாட்டின் ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹலிமா முகம்மது சாதிக் தெரிவித்துள்ளார். தைப்பூசம் தொடர்பில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைத் தமது அமைச்சு தயார்செய்து வருவதாக அவர் கூறினார்.