வெறும் 43 நிமிடங்கள், 2 ஆட்டங்கள், 78 புள்ளிகள். புதிய வரலாறு படைக்க இவ்வளவே ஆனது.
லோ கியன் இயூ, பேட்மிண்டன் உலக வெற்றியாளர் போட்டியை வென்ற முதல் சிங்கப்பூரர் ஆகியிருக்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 19) அன்று ஸ்பெய்னின் வெல்வா நகரத்தில் நடந்த இறுதிச் சுற்றில் உலகத் தரவரிசையில் 22ஆம் இடத்தில் உள்ள லோ, 14வது இடத்தில் உள்ள இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்தை 21-15. 22-20 எனும் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
வெள்ளிக்கிழமை (டிசம்பர் 17) நடந்த காலிறுதிப் போட்டியில் லோவின் வலது முழங்கால் அடிபட்டிருந்தது.
சனிக்கிழமை அன்று டென்மார்க்கின் ஆன்ட்ர்ஸ் ஆன்டன்சனுக்கு நடந்த அரையிறுதிஆட்டத்துக்குப் பின்னர் லோ சக்கரநாற்காலியில் செல்ல வேண்டியிருந்தது.
காலில் காயம் இருந்தபோதும் நேற்றைய இறுதிச்சுற்றில் லோ நிதானத்துடனும் துணிவுடனும் விளையாடினார்.
முதல் செட்டில் 9-3 புள்ளிகள் என்று பின்தங்கியிருந்த லோ பின்னர் மீண்டு எழுந்தார்.
12க்கு 12 என்று சமன்படுத்திய பின்னர் அவரது ஆட்டம் சூடுபிடித்தது. முதல் செட்டை வென்றார் லோ.
இரண்டாவது செட்டிலும் முதலில் ஸ்ரீகாந்த் 18க்கு 16 என்ற புள்ளிகளில் முந்தியிருந்தார்.
ஆனால் விடாப்பிடியாக முயன்று செட்டைக் கைப்பற்றினார் லோ.
பேட்மிண்டன் உலக வெற்றியாளர் போட்டி 1977இல் தொடங்கியதிலிருந்து இப்போது வரை, சீனா, இந்தோனீசியா, டென்மார்க், ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளே ஆண்கள் ஒற்றையர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளன.
இப்போது ஐந்தாவதாக சிங்கப்பூருக்கும் தங்கம் கிடைத்துள்ளது.
உழைப்பு, விடாமுயற்சியின் மூலம் சிங்கப்பூர்க் கொடியை உயரப் பறக்கச் செய்தததாகக் கூறி அதிபர் ஹலிமா யாக்கோப் தமது பேஸ்புக் பக்கத்தில் பாராட்டினார்.
பிரதமர் லீ சியன் லூங் லோ சிங்கப்பூருக்கு பெருமை சேர்த்துள்ளாகவும் அவரது அடுத்தடுத்த வெற்றிகளை எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
கடந்த மூன்று மாதங்களில் மட்டும், உலகின் பத்து சிறந்த பேட்மிண்டன் ஆட்டக்காரர்களில் ஆறு பேரை லோ வெற்றி கண்டுள்ளார்.