சிங்கப்பூரில் தொடர்ந்து 13வது நாளாக வாராந்திர கொவிட்-19 தொற்று விகிதம் உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் புதன்கிழமை 1.28ஆக இருந்த இவ்விகிதம், நேற்று வியாழக்கிழமை 1.5 ஆனது.
சமூகத்தில் கடந்த வாரம் அதற்கு முந்திய ஏழு நாள்களைக் காட்டிலும் கொரோனா பரவல் எவ்வாறு இருந்தது என்பதை இவ்விகிதம் குறிப்பிடுகிறது.
இவ்விகிதம் ஒன்றுக்குமேல் இருப்பது, கொரோனா பரவல் இன்னும் கூடி வருவதைக் காட்டுகிறது.
இதனிடையே, சிங்கப்பூரில் நேற்று மேலும் 813 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதற்கு முதல்நாளில் இந்த எண்ணிக்கை 805ஆக இருந்தது.
புதிதாகப் பாதிக்கப்பட்டோரில் 390 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், 404 பேர் சமூகத்தினர், 19 பேர் தங்குவிடுதி வெளிநாட்டு ஊழியர்கள்.
நேற்று முன்தினம் 440 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், நேற்று அந்த எண்ணிக்கை 365ஆகக் குறைந்தது. அந்த 365 பேரில் 131 பேர் உள்ளூர்வாசிகள், எஞ்சிய 234 பேரும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்.
கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் இறந்ததை அடுத்து, மொத்த உயிரிழப்பு 835 ஆனது.
நேற்றைய நிலவரப்படி, சிங்கப்பூரில் இதுவரை 283,214 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
தகுதியுள்ளோரில் 91 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுவிட்டனர். மொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 44 விழுக்காட்டினர் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.