வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்களில் இதுவரை ஏறக்குறைய 2,600 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் இதுவரை பதிவாகியுள்ள 4,322 ஓமிக்ரான் பாதிப்புகளில் இது ஏறத்தாழ 60 விழுக்காடாகும்.
சிங்கப்பூர் வந்தவுடன் ஓமிக்ரான் தொற்று உறுதிப்படுத்தப்பட்டோரில் பெரும்பாலானோர் நாடு திரும்பிய குடிமக்கள், நிரந்தரவாசிகள் மற்றும் நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போர் ஆவர். குறுகியகால பயணிகள் 10 விழுக்காட்டிற்கும் குறைவாக பங்கு வகிக்கின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்களில் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டோரில் தலா 16 விழுக்காட்டினர் அமெரிக்கா, பிரிட்டனிலிருந்து வந்தவர்கள். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 11 விழுக்காட்டினர் இந்தியாவில் இருந்து வந்தவர்கள்.
சிங்கப்பூரில் கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான 24 பயணப் பாதைகள் (விடிஎல்) தொடங்கப்பட்டன.
அந்தந்த நாடுகளில் உள்ள ஓமிக்ரான் நிலவரமும் இங்கு வந்திறங்குவோரிடையே தாக்கத்தை ஏற்படுத்துவதாக திங்கட்கிழமை (ஜனவரி 10) நாடாளுமன்றத்தில் திரு ஈஸ்வரன் கூறினார்.
ஓமிக்ரான் திரிபு காரணமாக மேற்கூறப்பட்ட மூன்று நாடுகளிலும் தொற்றுப் பாதிப்பு கூடியுள்ளது.
சாங்கி விமான நிலையத்தில் கடந்த ஆண்டு பயணிகள் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், தொற்று நிலவரம் குறித்த இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. கொவிட்-19க்கு முந்திய நிலவரத்துடன் ஒப்புநோக்க, கடந்த ஆண்டு தொடக்கத்தில் பயணிகள் போக்குவரத்து 3 விழுக்காடாக இருந்தது. கடந்த டிசம்பர் இறுதியில் அது 15 விழுக்காடாக உயர்ந்தது.
தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதைகள் தொடங்கப்பட்டதால் பயணிகள் போக்குவரத்து அதிகரித்ததாக திரு ஈஸ்வரன் சொன்னார்.