வழக்கமான அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சேவைகளை நிறுத்தி வைத்திருக்கும் இந்தியா, வரும் பிப்ரவரி 28ஆம் தேதி வரை அந்த நடவடிக்கையை நீட்டித்துள்ளது.
இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககம், அது குறித்த சுற்றறிக்கையை புதன்கிழமை (ஜனவரி 19) அன்று அனுப்பியது.
இருப்பினும் மற்ற நாடுகளுடனான தடையற்றப் பயணப் பாதைகளில் இயக்கப்படும் அனைத்துலக விமானச் சேவைகள் இந்த அறிவிப்பால் பாதிக்கப்படாது.
அனைத்துலகச் சரக்கு விமானச் சேவைகளும் வழக்கம்போல இயங்கும்.
கொவிட்-19 நோய்ப்பரவலால் இந்தியா , 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அனைத்துலக விமானச் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியது.
பின்னர், மற்ற நாடுகளுடன் தடையற்றப் பயணப் பாதைகளை அது அமைத்துக்கொண்டது.
அவற்றின்கீழ், கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சில அனைத்துலக விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கின.
இந்தியா, 20க்கும் மேற்பட்ட நாடுகளுடன் அத்தகைய ஏற்பாட்டைச் செய்துகொண்டுள்ளது.
அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சேவைகளை கடந்த டிசம்பர் 15 முதல், மீண்டும் முழுமையாகத் தொடங்க இந்தியா திட்டமிட்டிருந்தது.
ஆனால் ஓமிக்ரான் கிருமிப் பரவல் அச்சுறுத்தலால், அத்திட்டம் தள்ளி வைக்கப்பட்டது.