கொவிட்-19க்கு எதிரான மாத்திரையைக் குறைந்த செலவில் தயாரிக்க ஏறத்தாழ 30 மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டு இருக்கின்றன.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் ஆதரவு பெற்ற ‘எம்பிபி’ என்ற அமைப்பு இதனை தெரிவித்தது.
‘மெர்க் அண்ட் கோ’ நிறுவனம் உருவாக்கி இருக்கும் கொவிட்-19க்கு எதிரான மாத்திரையைக் குறைந்த செலவில் தயாரிப்பது அந்த உடன்பாட்டின் நோக்கம்.
இந்தியா, சீனா நாடுகளையும் ஆப்பிரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு நாடுகளையும் சேர்ந்த 27 நிறுவனங்கள் அந்த மாத்திரையைத் தயாரிக்க உடன்பாடு வழிவகுக்கிறது.
இப்படி தயாரிக்கப்படும் மாத்திரை, 105 ஏழை நாடுகளுக்கு விநியோகிக்கப்படும் என்றும் எம்பிபி தெரிவித்து உள்ளது.
“கொவிட்-19 தொற்றுக்கு எதிரான சிகிச்சைகள் அவசரமாகத் தேவைப்படுகின்றன. அத்தகைய சிகிச்சைகளை உலக நாடுகள் பெறுவதை உறுதிசெய்யக் கூடிய மிக முக்கியமான நடவடிக்கை இது.
“குறைந்த செலவில் மாத்திரையைத் தயாரிக்கும் நிறுவனங்கள், பல்வேறு நாடுகளின் ஒழுங்குமுறை நிர்வாகங்களுடன் அணுக்கமாகச் செயல்பட்டு வருகின்றன.
“இதனால் அந்த மாத்திரைகள் மிக வேகமாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று எம்பிபி அமைப்பின் நிர்வாக இயக்குநர் சார்ல்ஸ் கோர் தெரிவித்தார்.