சிங்கப்பூர் 12 முதல் 17 வயதினருக்கு 'பூஸ்டர்' எனப்படும் கூடுதல் தடுப்பூசிகளைப் போடவுள்ளது.
அதன்படி 12 முதல் 17 வயதுள்ளவர்கள் கூடுதல் தடுப்பூசி போட்டிருந்தால்தான் அவர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டவராகக் கருதப்படுவார்கள்.
இந்த நடைமுறை, மார்ச் 14ஆம் தேதி நடப்புக்கு வரும் என்று சுகாதார அமைச்சு வெள்ளிக்கிழமை (ஜனவரி 21) அன்று கூறியது.
கூடுதல் தடுப்பூசித் திட்டம் தற்போது 18 வயது அல்லது அதற்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.
பிப்ரவரி தொடக்கத்தில், கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள 12 முதல் 17 வயதினருக்கு குறுஞ்செய்தி மூலம் அழைப்பு விடுக்கப்படும்.
முதலில் 16 முதல் 17 வயதினருக்கும் பின்னர் 12 முதல் 15 வயதினருக்கும் குறுஞ்செய்திகள் அனுப்பப்படும்.
"இந்த வயதுப் பிரிவில் நீங்கள் இருந்து, உங்களுக்குக் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள குறுஞ்செய்தி கிடைத்தால், நீங்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்," என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் வலியுறுத்தினார்.
கொவிட்-19 பரவலுக்கு எதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழுவின் இணைத்தலைவரான திரு ஓங், பணிக்குழு வெள்ளிக்கிழமை நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.
அமெரிக்கா, இஸ்ரேல், சில்லி, கத்தார் போன்ற நாடுகள் 12 முதல் 17 வயதினருக்குக் கூடுதல் தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
கொவிட்-19 தடுப்பூசி தொடர்பான நிபுணர்கள் குழு இந்தத் தரவுகளை ஆராய்ந்தது.
பின்னர், 12 முதல் 17 வயதினருக்குக் கூடுதல் தடுப்பூசி பாதுகாப்பாகவும் செயல்திறன் மிக்கதாகவும் உள்ளது என்று குழு முடிவு செய்ததாக திரு ஓங் கூறினார்.
12 முதல் 17 வயதுள்ளவர்கள் , அடையாள விவரங்களைக் கொண்டுசென்று, ஃபைசர் தடுப்பூசி போடும் எந்த நிலையத்திலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
12 வயது சிறுவர்களுக்கும் சிறப்புத் தேவை உள்ளோருக்கான பள்ளிகளில் படிப்பவர்களுக்கும் பெற்றோர் உடன் செல்ல வேண்டும்.
13 வயது சிறுவர்களுக்குப் பெற்றோர் உடன்செல்லத் தேவையில்லை.