அப்பர் புக்கிட் தீமா வட்டாரத்தில் 11 வயது இரட்டை சகோதரர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட கால்வாய் அருகே ஆறு சமயங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் வழிபாடு நடத்தியுள்ளனர்.
இந்து சமயத்தைச் சேர்ந்த பூசாரிகள், மூத்த பெளத்த பிக்கு, கிருத்துவ பாதிரியார் உள்ளிட்டவர்கள் தத்தம் சமய முறைப்படி இறந்த சகோதரர்களுக்காக பிரார்த்தனை செய்தனர்.
அந்த இரண்டு சகோதரர்களின் சடலங்கள் வெள்ளிக்கிழமை இரவு கால்வாயில் கண்டெடுக்கப்பட்டன.
ஈத்தன் யாப், ஆஷ்டன் யாப் எனும் பெயர்கொண்ட அந்த இரட்டையர், சிறப்புத் தேவை உள்ள குழந்தைகள் என்று கூறப்பட்டது.
அவர்கள் எங் கோங் வட்டாரத்தில் உள்ள பள்ளியில் படித்ததாகவும் நம்பப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 23) நடந்த பிரார்த்தனையில், அந்த வட்டாரவாசிகள் சுமார் 20 பேரும் ஹாலந்து புக்கிட் தீமா நாடாளுமன்றக் குழுத் தொகுதி உறுப்பினர் சிம் ஆனும் அங்கு உடன் இருந்தனர்.
"நமக்கு அவர்களைத் தனிப்பட்ட முறையில் தெரியாத போதும், அவர்களின் அகால மரணம், நமக்கு, குறிப்பாக பெற்றோராய் இருப்பவர்களுக்கு, மனவேதனை அளிக்கிறது. இது நினைத்துப் பார்க்க முடியாத இழப்பு," என்றார் திருவாட்டி சிம் ஆன்.
அதனால்தான் அக்கபக்கத் தொண்டூழியர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர், அனைத்து சமய பிரார்த்தனை நிகழ்வுக்கு ஏற்பாடு செய்ததாக அவர் கூறினார்.
"மாண்டவர்களின் ஆன்மா சாந்தி அடையவேண்டும் என்று நாம் வேண்டிக்கொள்ள அது உதவும்," என்றார் அவர்.
சிறுவர்களின் மரணத்தின் தொடர்பில் அவர்களது 48 வயது தந்தையை போலிசார் கைது செய்துள்ளனர்.
அவர் மீது திங்கட்கிழமை (ஜனவரி 24) அன்று நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படும்.