கேம்பல் லேனில் அமைந்துள்ள ஜோதி ஸ்டோர் புஷ்பக் கடைக்குச் செல்வோர், கடையின் முகப்பில், கடைகளுடன் சம்பந்தப்பட்ட பொருள்களைக் காட்டும் அருங்காட்சியகமாக விளங்கும் குறுகிய வெள்ளைநிற காட்சிப் பெட்டி ஒன்றைக் காணலாம்.
1960களில் ஒட்டுக்கடையாக இருந்த ஜோதி ஸ்டோரின் வரலாற்றை விளக்கும் பனுவல்கள் இந்தக் காட்சிப் பெட்டிகளில் பொறிக்கப்பட்டுள்ளன. நீல நிற பை, வாழை நார், வண்ணக் களிமண் தீபம், வளையல் போன்ற பொருள்கள் இந்தப் பெட்டியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இக்கடையைப்போல லிட்டில் இந்தியாவில் நீண்டகால மரபுடைய மேலும் ஏழு கடைகளிலும் காட்சிப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. தேசிய மரபுடைமைக் கழகத்தின் சாலையோர அருங்காட்சியகத் திட்டத்தின்படி இந்தக் காட்சிப் பெட்டிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மக்கள் அன்றாடம் வந்துசெல்லும் இடங்களின் மரபுடைமை பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும் சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமையை வலுப்படுத்தவும் தொடங்கப்பட்டுள்ள இந்தச் சாலையோர மரபுடைமை அருங்காட்சியகங்கள், தேசிய மரபுடைமைக் கழகத்தின் ‘அவர் எஸ்ஜி’ மரபுடைமைத் திட்டத்தில் அங்கம் வகிக்கின்றன.
மூன்று ஆண்டுகால சோதனைத் திட்டமாக இது, பாலஸ்டியர் வட்டாரத்தில் ஐந்து மரபுடைமை வர்த்தகங்களில் பங்களிப்புடன் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடக்கம் கண்டது. பின்னர் ஏப்ரல் 2021ல் கம்போங் கிளாம் வட்டாரத்தில் ஏழு கடைகளில் காட்சிப் பெட்டிகள் வைக்கப்பட்டன.
ஜோதி ஸ்டோர் புஷ்பக் கடையுடன் அணிமணி பொற்சாலை, தண்டபாணி மளிகைக் கடை, எஸ்ஐஎஸ் இறைச்சிக் கடை, ஹனிஃபா டெக்ஸ்டைல்ஸ், ஆனந்த பவன், கோமள விலாஸ், பனான லீஃப் அப்போலோ உணவகங்கள் ஆகியவை இந்தத் திட்டத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எட்டுக் கடைகளாகும்.
சிங்கப்பூர் இந்தியர்களின் வாழ்வியலில் முக்கிய அங்கம் வகிக்கும் ஆபரணம் செய்யும் கலையே, தமது கடைக்குக் கிடைத்துள்ள அங்கீகாரத்தின்மூலம் கௌரவிக்கப்பட்டுள்ளதாக சிராங்கூன் ரோட்டில் அமைந்துள்ள அணிமணி பொற்சாலையின் உரிமையாளர்களில் ஒருவரான பி.வி.அசோகன், 64, தெரிவித்தார்.
மூன்று தலைமுறைகளைக் கடந்து இயங்கிவரும் தண்டபாணி மளிகைக் கடைக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளதில் பூரிப்படைவதாக இக்கடையை 1960களில் நிறுவிய திரு சண்முகத்தின் மருமகள் மீனா ஞானபண்டிதன், 45, தெரிவித்தார்.
“அனைவரின் வாழ்க்கைக்கும் சுவை சேர்ப்பதைத் தொழிலாக செய்துவரும் எங்களை இது பெருமைப்படுத்துகிறது. தமிழகத்தில் தொன்மையான சுவைகளை சிங்கப்பூர் மக்கள் எங்களது சேவையின்மூலம் சுவைக்க முடிகிறது,” என்று அவர் கூறினார்.