வரும் 2024ஆம் ஆண்டிலிருந்து கட்டுமானம், செய்முறை துறைகளில் வொர்க் பர்மிட் எனப்படும் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்போரின் விகிதம் குறைக்கப்படும்.
நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 18) அன்று நாடாளுமன்றத்தில் 2022க்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது இதைத் தெரிவித்தார்.
கட்டுமானம், செய்முறை துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் வொர்க் பர்மிட்டில் வேலைக்கு அமர்த்த அனுமதிக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்களின் விகிதம், 87.5 விழுக்காட்டிலிருந்து 83.3 விழுக்காட்டுக்குக் குறைக்கப்படும்.
இது 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து நடப்புக்கு வரும்.
தற்போதுள்ள ஓராண்டு பணிக்கான உரிமை நடைமுறை மாற்றப்படும்.
குறிப்பிட்ட திட்டங்களுக்காக குத்தகை நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும் வொர்க் பெர்மிட் ஊழியர்களை இது குறிக்கிறது.
வரும் 2024 ஜனவரியில் தீர்வைக்கான (லவி)புதிய நடைமுறை கொண்டு வரப்படும்.
வேலையிடம் இல்லாத வேறு இடத்தில் பணிகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கவும் அதிகத் திறன்பெற்றவர்களை வொர்க் பர்மிட்டில் வேலைக்கு எடுக்கவும் புதிய நடைமுறை ஊக்குவிக்கும்.
வரவுசெலவுத் திட்டத்தில் மனிதவள அமைச்சின் ஒதுக்கீடு குறித்த நாடாளுமன்ற விவாதத்தின்போது இதன் விவரங்கள் தெரிவிக்கப்படும்.