அடுத்த ஈராண்டுகளில் தற்போதைய 7 % விழுக்காட்டு பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) படிப் படியாக 9 விழுக்காடாக ஏற்றம் காணவிருக்கிறது.
வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 8% ஆகவும் 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 9% ஆகவும் ஜிஎஸ்டி உயர்த்தப்படும் என்று இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று தெரிவித்தார்.
நிதியமைச்சராக திரு வோங் வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தது இதுவே முதன்முறை.
ஒன்றுசேர்ந்து முன்னேற்றத்திற்கான புதிய வழியை வகுப்போம் எனும் தலைப்பிலான இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான திட்டமாகக் கருதப்படுகிறது.
ஜிஎஸ்டி உயர்வின் தாக்கத்தைச் சமாளிக்க அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் ஆதரவு வழங்கும் பொருட்டு மேம்படுத்தப்பட்ட $6.6 பில்லியன் மதிப்பிலான பொருள், சேவை வரி அதிகரிப்பை ஈடுசெய்யும் உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தை அமைச்சர் அறிவித்தார்.
சுகாதாரப் பராமரிப்புச் செலவினத்திற்கு ஜிஎஸ்டி உயர்விலிருந்து பெறப்படும் நிதி பயன்படுத்தப்படும் என்றும் சமுதாய அம்சங்களில் எதிர்காலச் செலவினங்கள் உயர்ந்தவண்ணம் இருப்பதால், ஜிஎஸ்டி உட்பட பல வரிகளை உயர்த்த வேண்டி உள்ளது என்றும் திரு வோங் சொன்னார்.
இந்த உயர்வைச் சமாளிக்க அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் உதவி வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 21 மற்றும் அதற்குமேல் வயதுடைய ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் $700 முதல் $1,600 வரையிலான ரொக்க வழங்கீடு தவிர அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு தகுதிபெறும் குடும்பங்களுக்கு ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு யு-சேவ், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு உட்பட பல திட்டங்கள் இந்த உறுதித் தொகுப்பில் உள்ளன.
அதிக வருமானம் ஈட்டுவோருக்கு தனிநபர் வருமான வரி இரண்டு வரம்புகளில் உயர்த்தப்படுகிறது.
சொத்து வரிகளும் இரண்டு கட்டங்களாக ஏற்றம் காண்கின்றன. சொகுசு கார்களின் கூடுதல் பதிவுக் கட்டணங்களில் ஆக அதிக வரம்பு உருவாக்கப்பட்டு, திறந்த சந்தை மதிப்பு $80,000க்கும் மேற்பட்ட தொகையில் 220% வரி வசூலிக்கப்படும்.
சிங்கப்பூர் பொருளியல் இவ்வாண்டு 3 முதல் 5 விழுக்காடு வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வளர்ச்சி, மேலும் அதிகமான நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்கும், ஊழியரணியின் எல்லா நிலைகளையும் சேர்ந்த சிங்கப்பூரர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நமது முயற்சிகளுக்கு ஆதரவு தரும் என்றார் அமைச்சர்.
அத்துடன், கொவிட்-19 தாக்கத்தில் இருந்து மீண்டுவர உடனடி, நேரடி ஆதரவை அமைச்சர் அறிவித்தார். வர்த்தகங்களுக்கு $500 மில்லியன் வேலை, தொழில் ஆதரவுத் திட்டம், குடும்பங்களுக்கு $560 மில்லியன், விமானத் துறை ஆதரவுத் தொகுப்பு, நிதி ஆதரவுத் திட்டங்களை அமைச்சர் அறிவித்தார்.
வேலை மாற்றத் திட்டம், திறன் வளர்ச்சி, குறைந்த வருமானமுள்ள ஊழியர்கள், முதிய ஊழியர்கள் போன்ற உதவி மேலும் தேவைப்படுவோருக்கென கூடுதல் ஆதரவுத் திட்டங்களை அமைச்சர் வெளியிட்டார்.
வேலைநலன் துணை வருமானத் திட்டம் மூலம் அதிகபட்ச வருடாந்திர வழங்கீடு $2,100லிருந்து $4,200 என உயரும்.
மேலும் அதிக துறைகளில் படிப்படியாக உயரும் சம்பள முறை செயல்படுத்தப்படும் என்றும் வெளிநாட்டு ஊழியர்களைப் பணி அமர்த்தும் நிறுவனங்கள் அனைத்து உள்ளூர் ஊழியர்களுக்கும் தகுதிபெறும் உள்ளூர்ச் சம்பளமான $1,400 வழங்க வேண்டும்.
படிப்படியாக உயரும் சம்பள உதவித்தொகைத்திட்டத்தின்கீழ் 2022ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரையிலான குறைந்த சம்பள ஊழியர்களின் சம்பள உயர்வை அரசாங்கம் பகிர்ந்து ஏற்கும்.
மின்னிலக்க ஆற்றல்களில் முதலீடு, புத்தாக்கம், ஆராய்ச்சி, மேம்பாடு, படைப்பாற்றல் ஆகியவற்றுக்கு கூடுதல் ஆதரவு, உள்ளூர் நிறுவனங்களின் கட்டமைப்பை உறுதிப்படுத்துதல் ஆகிய அம்சங்களின் மூலம் புதிய ஆற்றல்களில் முதலீடு செய்யும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
ஓய்வுக்காலத்திற்கு தயாராகும் முதிய ஊழியர்களுக்கான திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. மத்திய சேமநிதி விகிதம் உயர்த்தப்படுவதோடு, பணி ஓய்வுக்காலத்திற்கான மத்திய சேமநிதி அடிப்படைத் தொகை 2023ஆம் ஆண்டு முதல் 2027ஆம் ஆண்டிற்குள் 55 வயதை எட்டுவோருக்கு ஆண்டுக்கு 3.5% உயர்த்தப்படவுள்ளது.
நீடித்த நிலைத்தன்மைக்கான சிங்கப்பூரின் கடப்பாடும் இந்த வரவுசெலவுத் திட்டத்தில் வெளிப்பட்டது.
இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தின்கீழ் கொவிட்-19 பொது சுகாதார செலவுகளுக்காக இருப்பு நிதியிலிருந்து $6 பில்லியன் பெற அதிபரிடம் கொள்கை அளவில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலைச் சமாளிக்க இருப்பு நிதியிலிருந்து $52 பில்லியன் பெற அதிபரிடம் ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால் அதிலிருந்து இதுவரை $42.9 பில்லியன் மட்டுமே தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் வோங் தெரிவித்தார்.
இந்நிலையில், என்று பிரதமர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வரவுசெலவுத் திட்டம் பற்றி கருத்து உரைத்துள்ளார்.
முக்கிய அம்சங்கள்
♦ 2023, 2024ஆம் ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாக பொருள், சேவை வரி 7 விழுக்காட்டில் இருந்து 9 விழுக்காடாக உயர்த்தப் படவிருக்கிறது
♦ பொருள், சேவை வரி அதிகரிப்பை ஈடுசெய்ய $6.6 பில்லியன் மதிப்பிலான உத்தரவாதத் தொகுப்புத் திட்டம்
♦ $560 மில்லியன் மதிப்பிலான குடும்பங்களுக்கான ஆதரவுத் திட்டம்
♦ படிப்படியான சம்பள உயர்வு முறை மேலும் பல துறைகளுக்கு விரிவாக்கம்
♦ புதிய எம்பிளாய்மண்ட் பாஸ், எஸ்-பாஸ் விண்ணப்ப தாரர்களுக்குக் குறைந்தபட்ச தகுதி ஊதியம் அதிகரிப்பு
♦ சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உற்பத்தித் திறன் தீர்வுகள் மானியமாக நாலாண்டுகளுக்கு $600 மி.
♦ $500 மில்லியன் மதிப்பிலான வேலை, தொழில் ஆதரவுத் தொகுப்புத் திட்டம்
♦ பணி ஓய்வுக்காலத்திற்கான மத்திய சேமநிதி அடிப்படைத் தொகை ஐந்தாண்டுகளுக்கு ஆண்டிற்கு 3.5% உயரும்
♦ வருமானம் ஈட்டுவோரில் முதல் 1.2% விழுக்காட்டினருக்கு வருமான வரி விகிதம் அதிகரிப்பு
♦ அனைத்துலக விமானத்துறை மையம் எனும் நிலையைத் தக்க வைக்க விமானத்துறை ஆதரவுத் திட்டம்