கொவிட்-19 தொற்று பாதிப்பு மேலும் தணிந்த பிறகு டிரேஸ்டுகெதர், சேஃப்என்ட்ரி, தடுப்பூசி அடிப்படையிலான நடைமுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் மறுஆய்வு செய்யப்படும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்திருக்கிறார்.
உணவு, பான நிலையங்களில் மேசைகளுக்கு இடையிலான பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகள் போன்ற மற்ற நடைமுறைகளும் மறுஆய்வு செய்யப்படும் என்று திரு ஓங் நாடாளுமன்றத்தில் நேற்று கூறினார்.
அத்தகைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு, இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களைப் பொறுத்தமட்டில், முன்னெச்சரிக்கையுடன் இருப்பதும் தொற்று பரவ மிகுந்த வாய்ப்புள்ள இடங்களைத் தவிர்ப்பதும் அவர்களின் தனிப்பட்ட பொறுப்பு என்றார் அமைச்சர் ஓங். இல்லையேல், தடுப்பூசி போட்டுக்கொள்வது என அவர்கள் மனம் மாற வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
"பொது மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தபோதும், அவை இன்னும் பரபரப்பாகவே இயங்கி வருகின்றன," என்றார் திரு வோங்.
கடந்த வாரத்தில் இருந்து பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டிருப்பதும் மருத்துவமனைகளுக்குப் பார்வையாளர் வருகை மீண்டும் அனுமதிக்கப்பட்டிருப்பதும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களின் பணிச்சுமையை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்னும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளதோரை கொரோனா தொற்றினால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் தடுப்பூசி அடிப்படையிலான நடைமுறைகள் இன்னும் தேவைப்படுவதாக அமைச்சர் ஓங் சுட்டினார்.
"மருத்துவமனையில் நிலைமை சீராகி, மேம்பட்டு வருவதை உறுதிசெய்தபின், தடுப்பூசி அடிப்படையிலான நடைமுறைகள் நடப்பில் உள்ள இடங்களைக் குறைப்பது அல்லது அவற்றை முழுமையாக அகற்றுவது குறித்து மறுஆய்வு செய்யப்படும்," என்றார் அவர்.
தடுப்பூசி அடிப்படையிலான நடைமுறைகள் நீக்கப்பட்டபின் சேஃப்என்ட்ரியும் தேவைப்படாது என்று அவர் குறிப்பிட்டார்.
டிரேஸ்டுகெதரைப் பொறுத்தமட்டில், பொதுமக்களிடத்தில் தொடர்புகளின் தடமறிய சுகாதார அமைச்சு அதனைச் சார்ந்திருக்கவில்லை என்றும் அதே நேரத்தில், பள்ளிகள் போன்ற எளிதில் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ள சூழல்களில் அது தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.
டிரேஸ்டுகெதர், சேஃப்என்ட்ரி மூலம் தொகுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள், கொவிட்-19 பரவலால் எளிதில் பாதிக்கப்படவல்ல இடங்களைப் பற்றிய நல்ல யோசனையை அதிகாரிகளுக்கு வழங்க முடியும் என்பது திரு ஓங்கின் கருத்து.
"ஆகையால், டிரேஸ்டுகெதர் உகந்ததாக இருக்கிறதா இல்லையா என்பதையும் அதன் பயன்பாட்டையும் அது இனித் தேவைப்படுமா இல்லையா என்பதையும் கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழு மறுஆய்வு செய்யும்," என்று அமைச்சர் ஓங் விளக்கமாகக் கூறினார்.