கடந்த பிப்ரவரியில் 70 வயதைப் பூர்த்திசெய்த பிரதமர் லீ சியன் லூங், அந்த வயதை எட்டுவதற்குள் பிரதமர் பதவியை வேறொருவரிடம் ஒப்படைக்க எண்ணம் கொண்டிருந்ததாக முன்னதாகக் கூறியிருந்தார்.
எனினும், கொவிட்-19 பெருந்தொற்று உருவெடுத்ததைத் தொடர்ந்து, சிங்கப்பூர் இந்த நெருக்கடியைக் கடந்துவர உதவ தமது ஓய்வுக்காலத்தைத் தள்ளிப்போடுவதாக திரு லீ கூறியிருந்தார்.
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மக்கள் செயல் கட்சியின் நான்காம் தலைமுறை தலைவர் பொறுப்பிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் வரை பிரதமராக தாம் தொடரப்போவதாக திரு லீ தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இஸ்தானாவில் இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 16) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய திரு லீ, “லாரன்ஸ் (வோங்) தயாரானவுடன் பிரதமர் பதவியை அவரிடம் ஒப்படைக்க நான் எதிர்பார்ப்புடன் உள்ளேன்,” என்று கூறினார்.
தலைமைத்துவ மாற்றம் கவனமாக செய்யப்படும் என்றார் அவர். இதில் பரிசீலிக்க வேண்டிய ஓர் அம்சம், அடுத்த பொதுத் தேர்தலாகும் என்று சொன்ன அவர், அது 2025க்குள் நடத்தப்பட வேண்டும் என்பதைச் சுட்டினார்.
இதை அணுகுவதில் ஆகச்சிறந்த உத்தியை திரு வோங்குடன் சேர்ந்து தாம் கலந்தாலோசிக்க இருப்பதாக திரு லீ சொன்னார்.
இதன் தொடர்பில் அதே செய்தியாளர் கூட்டத்தில் கருத்து கூறிய திரு வோங், “பிரதமர் பொறுப்பை ஏற்க நான் தயாராக இருக்கும்போது அது பற்றி திரு லீயிடம் நிச்சயம் எடுத்துச் சொல்வேன்,” என்று தெரிவித்தார்.