தமிழ் வளங்கள் தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமின்றி, சிங்கப்பூரில் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான மற்றொரு படிக்கல்லும்கூட என்று தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் வரலாற்றில் ஆக அதிக தமிழ் வாசிப்பு வளங்களைக் கொண்ட ‘தமிழ் சோலை’யை உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் நேற்று அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்து அவர் பேசினார்.
செவ்விலக்கியங்கள், விருதுபெற்ற நூல்கள், சிங்கப்பூர் இலக்கியம், உள்ளூர் நூல்கள் உள்பட தமிழ், தமிழர் சார்ந்த 20,000க்கும் மேற்பட்ட வளங்களைத் தமிழ்ச் சோலை கொண்டுள்ளது.
தமிழ்மொழி, பண்பாடு, வரலாறு குறித்து விவரிக்கும் 1,000 ஆங்கில, மலாய், சீன நூல்களும் அதில் இடம்பெற்றுள்ளன.
17 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகளும் உள்ளன.
தமிழ் அறியாதவர்களுக்கு ஆங்கில நிகழ்ச்சிகளையும் தமிழ்ச் சோலை வழங்குகிறது. இதனால் எல்லா இனத்தவரும் இணைந்து தமிழ்ப் பண்பாட்டைப் புரிந்துகொள்ள வாய்ப்பு கிட்டும் என்றார் அமைச்சர்.
சிங்கப்பூரின் தமிழ்ச் சமூகம் அதன் அளவைவிட முக்கியத்துவம் பெற்றது. இந்நிலை நீண்டகாலத்துக்குத் தொடர வேண்டும் என்றார் அமைச்சர்.
குறள் சொல்லித்தந்த பாடம்
திருக்குறள் உள்பட தமிழ்ச் சோலையின் வளங்கள் தமக்கு வாழ்க்கை, பண்பாடு பற்றி ஆழமான புரிந்துணர்வை தந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், ‘தொட்டனைத் தூறும் மணற்கேணி, மாந்தர்க்குக் கற்றைனைத் தூறும் அறிவு’ என்ற குறளை மேற்கோள் காட்டி தமது உரையைத் தொடங்கினார்.
குறளின் மூன்று படிப்பினைகளாக, வாழ்நாள் கற்றல், நமது பண்பாட்டுடன் மற்ற பண்பாடுகளை உள்ளடக்கி பரவலாக கற்பது, நூலகங்கள் உட்பட கல்வி நிலையங்
களின் முக்கியத்துவம், ஆகியவற்றை முன்வைத்து விவரித்தார் அமைச்சர்.
உலகமயமான பண்புகளை அனைவருக்கும் உணர்த்தும் இது போன்ற குறள்களின் எக்காலத்துக்கும் பொருந்தும் பாடங்களை திருக்குறளின் மொழிபெயர்ப்புகளின்றி நாம் அறிந்திருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
தமிழ் வளங்களைத் திரட்டி, போற்றி, பாதுகாக்கும் முயற்சிகளின் மற்றொரு படிக்கல்லாக ‘சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியம்’ உருவாக்கத்திலும் தேசிய நூலக வாரியம் பங்கெடுக்கிறது.
சிங்கப்பூர்த் தமிழர் வரலாற்றைப் பறைசாற்றும், சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் இந்தத் திட்டத்தில் நூலக வாரியமும் கைகோர்க்கும் என்று உள்துறை இரண்டாம் அமைச்சரும் அறிவார்ந்த தேசம், இணையப் பாது காப்பு ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திருமதி ஜோசஃபின் டியோ அறிவித்தார்.
கடுமையான கொவிட்-19 சூழலிலும் கற்றலில், குறிப்பாக தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கூடியதாகவும் நூலகத்துக்கு வருவோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்ததாகவும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு தமிழ் மின்னூல்களின் இரவல் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டின் 9,000 என்ற எண்ணிக்கையைக் காட்டிலும் இரட்டிப்பானதாகவும் திருமதி டியோ தெரிவித்தார்.