தற்போது நடைபெற்று வரும் போரில் ரஷ்யா, உக்ரேன் என்ற இருதரப்புக்கும் வெற்றி கிடைக்காது என்றும் அமைதியின் பக்கமே இந்தியா இருக்க விரும்புகிறது என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.
மூன்று நாள் ஐரோப்பிய பயணமாக ஜெர்மனி சென்ற அவர், ஜெர்மன் பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸுடன் இணைந்து செய்தியாளர்
களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "உக்ரேன் நெருக்கடி தொடங்கியபோதே வன்முறை உடனடியாக நிறுத்தப்பட்டு, பிரச்சினைகளுக்குப் பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்வு காண வேண்டுமென இந்தியா வலியுறுத்தியது.
"இந்தப் போரில் எத்தரப்புக்கும் வெற்றி கிடைக்காது. ஆனால், அனைவரும் பேரளவில் பாதிக்கப்படுவர். உக்ரேன் விவகாரத்தால் கச்சா எண்ணெய் விலை விண்ணைத் தொட்டுள்ளது. உரங்கள், உணவுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
"அதனால், உலகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது. வளர்ந்து வரும் நாடுகளும் வறிய நாடுகளுமே அதிக பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. போரால் மனிதகுலத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து பெரிதும் கவலைப்படும் இந்தியா, இந்த விவகாரத்தில் அமைதியையே விரும்பு கிறது," என்று கூறினார்.
உக்ரேன் மீது படையெடுத்ததற்காக ரஷ்யாவை இந்தியா இதுவரை கண்டிக்கவில்லை என்பதும் ரஷ்யாவிலிருந்து ஏராளமான ஆயுதங்களை இந்தியா வாங்கிவருவதும் உலகிற்குத் தெரிந்தவை.
'போரை அதிகாரபூர்வமாக
ரஷ்யா அறிவிக்கும்'
இதற்கிடையே, மே 9ஆம் தேதி உக்ரேன் மீது போர் தொடுத்திருப்பதை ரஷ்யா அதிகாரபூவர்மாக அறிவிக்க இருப்பதாக அமெரிக்க, மேற்கத்திய அதிகாரிகள் நம்புகின்றனர். இரண்டாம் உலகப்போர் முடிவில் நாசி ஜெர்மனி சரணடைந்ததைக் குறிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் மே 9ஆம் தேதியை வெற்றித் திருநாளாக ரஷ்யா கொண்டாடி வருகிறது.
எனவே, அதிகாரத்துவ போர் பிரகடனத்துக்கு இந்த நாளை அதிபர் விளாடிமிர் புட்டின் தேர்வுசெய்த தாக செய்திகள் தெரிவிக்கின்றன.
உக்ரேன் மீது தமது நாடு நடத்தி வரும் தாக்குதலை போர் என்றோ படையெடுப்பு என்றோ அதிபர் புட்டின் இதுவரை குறிப்பிடவில்லை. அதற்குப் பதிலாக உக்ரேன் மீதான 'சிறப்பு ராணுவ நடவடிக்கை' என்று அவர் தொடர்ந்து கூறி வருகிறார்.