இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு பாதுகாப்பு வேலை நிறுத்தம் அமலாக்கப்பட்டுள்ளது.
மனிதவள அமைச்சும், வேலை இடப் பாதுகாப்பு சுகாதார மன்றம், தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் ஆகிய அமைப்புகளும் தொழில்துறைப் பங்காளிகளும் இந்த வேலை நிறுத்தத்தைக் கோரியுள்ளனர்.
இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை 20 பேர் வேலையிடங்களில் விபத்துகளாலோ மற்ற காரணங்களினாலோ மரணம் அடைந்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் மட்டும் 10 பேர் மரணம் அடைந்துள்ளனர். இது மிதமிஞ்சிய அளவு என்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று அல்ல என்றும் பிரதமர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
வேலை நிறுத்தப்படும் நேரத்தில் பாதுகாப்பில் கவனம் செலுத்தவும் பாதுகாப்பு நிர்வாக முறைகளை வலியுறுத்தவும் ஊழியர்கள் எழுப்பும் பாதுகாப்பு அக்கறைகளை உடனே கவனிக்கவும் நிறுவனங்கள் ஈடுபடும் என்றும் திரு லீ குறிப்பிட்டார்.
"இதைச் சரி செய்ய வேண்டும். முதலாளிகள், மேர்பார்வையாளர்கள், ஊழியர்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன் - வேலையிட பாதுகாப்பை முதன்மையாகக் கருதுங்கள். இது உயிர்கள் சம்மந்தப்பட்ட ஒன்று. உள்ளூர் அல்லது வெளிநாட்டு ஊழியர்கள் அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருப்பது நமது பொறுப்பு," என்றார் பிரதமர்.
"நமது ஊழியர்கள் அவர்களது குடும்பங்களிடம் பாதுகாப்பாகத் திரும்பிச் செல்ல அனைவருக்கும் வேலையிடம் பாதுகாப்பாக இருப்பதை நாம் உறுதி செய்வோம்."