காலை ஏழரை மணிக்குத் தொடங்கும் வேலை, மாலை 6 மணி அளவில் முடிய வேண்டும். ஆனால் சில நேரங்களில் இரவு 10,11 மணி வரை வேலை தொடர்கிறது.
வெளிநாட்டு ஊழியர்கள் பலருக்கு வாழ்க்கை தற்போது இப்படித்தான் செல்கிறது.
இரண்டு ஆண்டு கட்டுப்பாடுகளால் இழந்த காலத்தை ஈடுகட்ட வேண்டும்.
ஊழியர் பற்றாக்குறை. அதே நேரத்தில் தேங்கியிருந்த வேலைகளை முடிக்கவேண்டும் என்ற அவசரகதியில் பல வேலையிடங்கள் இயங்குகின்றன.
வேலையிடங்களில் இதனால் விபத்துகள் நிகழும் அபாயமும் உள்ளது.
சில நேரங்களில் திறன் குறைபாடும் வேலையிட விபத்துகளுக்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சிங்கப்பூரில் இந்த ஆண்டு இதுவரை 20 வேலையிட மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
2016 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான மாதங்களுக்குப் பின்னர் இதுதான் ஆக அதிக எண்ணிக்கை.
அவற்றில் பத்து மரணங்கள் ஏப்ரலில் மட்டும் ஏற்பட்டன.
கடந்த திங்கட்கிழமை இரண்டு வாரகால பாதுகாப்பு வேலை நிறுத்தம் தொடங்கியது.
இந்த நேரத்தில் நிறுவனங்கள் அவற்றின் வழக்கமான பணிகளை தள்ளி வைத்துவிட்டு பாதுகாப்பு நடைமுறைகளை மறுஆய்வு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டன.
இதுவரை 12,000 நிறுவனங்கள் வேலை பாதுகாப்பு நிறுத்தத்தில் ஈடுபட உறுதி அளித்துள்ளன அல்லது அவ்வாறு செய்துள்ளன.
வேலையிட விபத்துகளைத் தவிர்க்க, மனிதவள அமைச்சு இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் கிட்டத்தட்ட 1,700 சோதனைகளை நடத்தி உள்ளது.
அமைச்சு 15 வேலை உத்தரவுகள், 700 எச்சரிக்கைகள் ஆகியவற்றை விடுத்தது. 150 அபராதங்களை விதித்தது.
அண்மையில் நிகழ்ந்த வேலையிட மரணங்கள் அனுபவம் இல்லாததால் நிகழவில்லை.
அந்த விபத்துகளில் மரணம் அடைந்தனர் அனைவரும் குறைந்தது நான்கு ஆண்டு வேலை அனுபவம் உள்ளவர்கள்.
போதுமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இல்லாதது, முறையான வேலை நடைமுறைகளை கடைபிடிக்காதது, ஊழியர்கள் மத்தியில் வேலையிட பாதுகாப்பு பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாதது போன்றவற்றால் இந்த மரணங்கள் நிகழ்ந்தன.
நிர்வாகங்கள் வேலையிடப் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதில்லை. மாறாக வேலையை சீக்கிரம் முடிக்கவேண்டும் என்பதில் அவை குறியாக உள்ளன.
ஊழியர்களும் அவசரமாக வேலைகளைச் செய்ய வேண்டி உள்ளது. அல்லது பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்கின்றனர்.
இதனால் பாதுகாப்பு அடிபட்டுப் போகிறது.
கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்குப் பின்னர் மிக வேகமாக வேலைகள் நடந்துவரும் இந்நிலையில், ஊழியர்களுக்கு வேலையிடப் பாதுகாப்பு குறித்து மீண்டும் பயிற்சி தேவை என்று சில நிபுணர்கள் கூறினர்.
அத்துடன் அந்தந்த வேலைகளுக்குத் தேவையான எண்ணிக்கையில் ஊழியர்கள் வேண்டும் என்றும் நிபுணர்கள் சொல்கின்றனர்.
பாதுகாப்பை வலியுறுத்தவதற்கு அதிகாரிகள் வட்டார அலுவலகங்கள் அமைக்கலாம் என்றும் வேறு சில நிபுணர்கள் கூறினர்.