ஆஸ்திரேலியப் பொதுத் தேர்தலில் அந்த நாட்டு தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றபோது ஆனந்தக் கண்ணீர் சிந்திக் கொண்டாடியது ஒரு தமிழ்க் குடும்பம்.
இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்த நடேசன் முருகப்பன் குடும்பம்தான் அந்தக் குடும்பம்.
தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் தாங்கள் வாழ்ந்து வந்த இடத்துக்குத் திரும்பலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்குப் பிறந்திருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து வசிப்பதற்காக கடந்த நான்கு ஆண்டுகளாக சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர் நடேசன் முருகப்பன் குடும்பத்தார்.
பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால், அந்தக் குடும்பத்துக்கு ஆஸ்திரேலியாவில் நிரந்தரவாசம் தருவதாக தொழிலாளர் கட்சி பிரசாரத்தின்போது வாக்கு கொடுத்தது.
அந்தக் குடும்பத்தார் வசித்துவந்த பிலோயெலா எனும் ஊருக்கு திரும்புவதற்கு அனுமதிக்கப் போவதாகவும் அது கூறி இருந்தது.
ஆனால் அந்த குடும்பத்துக்கு அகதிகள் எனும் அங்கீகாரம் கிடைக்கவில்லை.
கடந்த 2018ஆம் ஆண்டு தங்கள் விசா அனுமதி காலாவதி ஆன பின்னர், அவர்கள் வலுக்கட்டாயமாக கிறிஸ்மஸ் தீவில் உள்ள குடிநுழைவு தடுப்பு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
அவர்களுக்கு நிரந்தரவாசம் வழங்க கான்சர்வேட்டிவ் கட்சி தலைமையிலான அரசாங்கம் மறுத்து வந்தது. இது பெரிய அரசியல் பிரச்சினையாகவும் மாறியது.
சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குள் நுழைபவர்களுக்கு விசா வழங்குவது, ஆள் கடத்தலில் ஈடுபடுவர்களுக்கு வழி வகுப்பது போன்றது என்று திரு ஸ்காட் மோரிசன் தலைமையிலான அரசாங்கம் கூறி வந்தது.
இளைய மகள் தாரணிகாவுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்படாமல் அது ரத்தத்தில் தொற்றுக்கு இட்டுச் சென்றது.
அதை அடுத்து நடசேன் பிரியா குடும்பம் பெர்த்தில் தற்காலிகமாக வசிப்பதற்கு அரசாங்கம் அனுமதித்தது.
இப்போதாவது தங்கள் நண்பர்கள் விரைவில் ஊர் திரும்புவார்கள் என்ற நம்பிக்கையில் பொதுத் தேர்தல் முடிவுகளைக் கொண்டாடினர், நடேசன் முருகப்பன் குடும்பத்தாரின் சட்டப் போராட்டத்துக்கு உதவி வரும் பிலோயெலா மக்கள்.