சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்கு கட்டாய ஓய்வு நாள் ஏற்பாடு இந்த ஆண்டு முடிவில் நடப்புக்கு வருகிறது.
அவர்களுக்காக வாரம் ஏழு நாள்களும் 24 மணி நேரமும் நேரடி தொலைபேசி சேவை இயங்குகிறது. நேர்காணல்களும் இடம்பெறும்.
இவை எல்லாம் சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களின் நல்வாழ்வுக்கு உதவும் நடவடிக்கைகளில் உள்ளடங்கும் என்று மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் நேற்று தெரிவித்தார்.
என்டியுசி மே தின இல்லப் பணிப்பெண்கள் கொண்டாட்டம் 2022 நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். அந்த நிகழ்ச்சி இந்த ஆண்டு மெய்நிகர் ரீதியில் நேற்று நடந்தது.
முதலாளிகள் இல்லப் பணிப்பெண்களுக்கு மாதம் ஒரு நாள் கட்டாயம் ஓய்வு வழங்க வேண்டி இருக்கும் என்று மனிதவள அமைச்சு சென்ற ஆண்டு ஜூலையில் அறிவித்தது. அந்தப் புதிய விதி 2022 முடிவில் நடப்புக்கு வருமென்றும் தெரிவிக்கப்பட்டது.
"அந்த விடுமுறையைப் பயன்படுத்தி பணிப்பெண்கள் வீட்டு வேலைக்கு அப்பால் ஓர் ஆதரவு கட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
"ஓய்வில்லாமல் உழைக்கும் அவர்கள் ஒரு நாள் ஓய்வு எடுத்துக்கொண்டு புது தெம்பையும் பெற முடியும்," என்று அமைச்சர் திருவாட்டி கான் தெரிவித்தார்.
இல்லப் பணிப்பெண்கள் தங்கள் ஓய்வு நாள்களைப் பயனுள்ள முறையில் செலவிட தோதாக மேலும் பல செயல்திட்டங்களையும் நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் சேர்ந்து அமைச்சு நடைமுறைப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் மையம் என்ற அமைப்புடன் சேர்ந்து நேர்காணல் ஏற்பாடு ஒன்றையும் மனிதவள அமைச்சு நடைமுறைப்படுத்தி வருகிறது.
அதன்படி, புதிதாக சிங்கப்பூருக்கு வரும் இல்லப் பணிப்பெண்கள் வேலையில் சேர்ந்த பிறகு முதல் ஒரு சில மாதங்களில் நேர்காணல்களுக்கு ஈடுபடுத்தப்படுவார்கள்.
இந்த அமைப்பின் தூதர்கள் பணிப்பெண்களுக்கு உதவி வருகிறார்கள்.
இந்த அமைப்பு வாரம் ஏழு நாள்களும் 24 மணி நேரமும் நேரடி உதவி தொலைபேசியை நிர்வகித்து வருகிறது.
பணிப்பெண்கள் தங்களுக்குத் தெரிந்த மொழியில் அந்தத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு உதவி பெறலாம் என்று திருவாட்டி கான் தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்று காரணமாக பல சவால்கள் ஏற்பட்டாலும் கூட முதலாளிகளின் குடும்பங்களுக்கு உறுதுணையாக இருந்து தொடர்ந்து ஆதரவு அளித்து இல்லப் பணிப்பெண்கள் உதவி இருக்கிறார்கள் என்று தெரிவித்த அமைச்சர், அதற்காக பணிப்பெண்களுக்கு நன்றி கூறினார்.
பரஸ்பர மரியாதை தருகின்ற, வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களைப் பராமரிக்கின்ற ஒரு கலாசாரத்தை எல்லாரும் சேர்ந்து பலப்படுத்துவோம் என்று அமைச்சர் அறைகூவல் விடுத்தார்.
நேற்றைய கொண்டாட்ட நிகழ்ச்சியில் இல்லப் பணிப்பெண்கள் பல விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழ்ந்தனர். பலர் மேடை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த திருவாட்டி கிரேசில் பெத் திம்திம், 38, என்பவர் இங்கு இல்லப் பணிப்பெண்ணாக 10 ஆண்டு காலம் வேலை பார்க்கிறார்.
தன்னுடைய முதலாளியின் புதல்வியான 18 வயது மாணவி ஜேனி பே கிட்டார் வாசிக்க, அந்தப் பணிப்பெண் அருமையான ஒரு பாடலைப் பாடி எல்லாரையும் மகிழ்வித்தார்.
கிட்டாரை எப்படி வாசிப்பது என்பதைத் தன்னுடைய முதலாளியின் புதல்விக்கு ஏற்கெனவே அந்தப் பணிப்பெண் கற்றுக் கொடுத்து இருந்தார்.
இதனிடையே, இல்லப் பணிப்பெண்களை நினைவுகூர்ந்து பாராட்டி மகிழ்விப்பதற்காக ஒரு நாளை ஒதுக்குவது மிக முக்கியமான ஒன்று என்று தான் கருதுவதாக மாணவி குமாரி ஜேனி பே குறிப்பிட்டார்.
கட்டாய விடுப்பு, 24/7 நேரடி உதவி தொலைபேசி, நேர்காணல்