மோசமான வேலையிடப் பாதுகாப்பும் சுகாதாரமும் கொண்ட நிறுவனங்களுக்கான தண்டனைகள் ஜூன் 14 முதல் கடுமையாக்கப்பட உள்ளன.
அதன் ஒரு பகுதியாக, பாதுகாப்புச் சோதனைகளில் கண்டுபிடிக்கப்படும் குற்றங்களுக்கான அபராதத் தொகை இரட்டிப்பாக்கப்படும்.
அத்தொகை அதிகபட்சம் 5,000 வெள்ளி வரை உயரும். மனிதவள அமைச்சு திங்கட்கிழமை (ஜூன் 13) அன்று இதைத் தெரிவித்தது.
வேலை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அல்லது தனது ஊழியர்களுக்கு மிகப் பெரிய காயங்கள் ஏற்பட்டிருக்கும் நிறுவனங்கள் வெளியிலிருந்து கணக்காய்வாளரை நியமித்து தங்கள் தற்போதைய வேலைமுறையை மறுஆய்வு செய்ய வேண்டும்.
வேலையிடப் பாதுகாப்புக்கு நிறுவனங்கள் கூடுதல் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பது மனிதவள அமைச்சின் அண்மைய பாதுகாப்புச்
சோதனைகள் காட்டுவதாக மூத்த மனிதவள துணை அமைச்சர் ஜாக்கி முகம்மது செய்தியாளர்களிடம் கூறினார்.
நிறுவனத்தின் நிர்வாகத்தினர்மீது கூடுதல் பொறுப்பை மனிதவள அமைச்சு வைக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் இந்த ஆண்டு வேலையிட மரணங்கள் கூடியுள்ள வேளையில் அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
பாதுகாப்பு நடைமுறைகளை சீரமைக்க வழக்கமான வேலைகளை நிறுத்தும்படி சென்ற மாதம் நிறுவனங்களுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்தது.
இவ்வாண்டு இதுவரை மட்டும் 26 பேர் வேலையிட விபத்துகளில் இறந்துவிட்டனர்.
2016ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரைக்குமான காலகட்டத்துக்குப் பிறகு இந்த ஆண்டுதான் வேலையிட மரணங்கள் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளன.
அதனுடன் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை 200க்கும் அதிகமான ஊழியர்களுக்கு பெரிய காயங்கள் ஏற்பட்டன.
வேலையிட மரணங்கள், பெரிய காயங்கள் ஏற்பட்ட 65 விழுக்காட்டு விபத்துகளில் சிறிய நடுத்தர நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களே சிக்கினர் என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.