ஒவ்வொரு குடும்பத்திற்கும் பத்து 'ஏஆர்டி' பரிசோதனைக் கருவிகள் வழங்கப்படும்
பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளை இப்போதைக்குக் கடுமையாக்க வேண்டிய தேவையில்லை என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
ஆயினும், கொவிட்-19 தொற்று பாதிப்பு அதிகமாகப் பதிவானால் அவ்வாறு நடக்காது எனச் சொல்வதற்கில்லை என்று திரு வோங் கூறியிருக்கிறார்.
கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு மற்றும் பரிசோதனையின் அவசியத்தை வலியுறுத்திய அவர், எல்லாக் குடும்பங்களுக்கும் பத்து விரைவுப் பரிசோதனைக் கருவிகள் (ஏஆர்டி) வழங்கப்படும் என்று அறிவித்தார். ஏஆர்டி கருவிகள் விநியோகம் அடுத்த மாதம் தொடங்கும்.
நீ சூன் சென்ட்ரலில் அமைக்கப்பட்டுள்ள நடமாடும் தடுப்பூசி மையத்தைத் துணைப் பிரதமர் வோங் நேற்றுப் பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய பிஏ4 மற்றும் பிஏ5 கொவிட்-19 கிருமி துணைத் திரிபுகளே அண்மைய தொற்று உயர்விற்குக் காரணம் என்றார்.
"கிருமித்தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்," என்றார் திரு வோங்.
"இப்போதைய பாதிப்புகள் தீவிரத்தன்மை மிக்கவை என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. மருத்துவமனைகளால் நிலைமையைச் சமாளிக்க முடிகிறது. நடப்பிலுள்ள விதிமுறைகளைக் கடுமையாக்காமலேயே இந்தக் கிருமிப் பரவல் அலையைச் சிங்கப்பூரால் கடந்துசெல்ல இயலும். ஆனாலும், நிலைமை அணுக்கமாகக் கண்காணிக்கப்பட வேண்டும்," என்று திரு வோங் சொன்னார்.
வரும் வாரங்களில் தொற்றுப் பரவல், அதன் தீவிரத்தன்மை, மருத்துவமனை நிலவரம் போன்ற நிலவரங்கள் கண்காணிக்கப்படும் என்ற அவர், தேவைப்பட்டால் சில மாற்றங்களைச் செய்ய வேண்டி இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
துணைப் பிரதமருடன் சுகாதார அமைச்சர் ஓங் யி காங்கும் நீ சூன் நடமாடும் தடுப்பூசி மையத்திற்குச் சென்றிருந்தார்.
மூத்த குடிமக்கள் எளிதில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வகையில் 50 நடமாடும் தடுப்பூசி மையங்களை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, ஈசூன், தெலுக் பிளாங்கா, சாய் சீயில் உள்ள அன்சர் ஆகிய இடங்களில் நேற்று அம்மையங்கள் திறக்கப்பட்டன.
"இப்போதைய கொவிட்-19 அலையைப் பாதுகாப்பாகக் கடந்துசெல்ல நாம் நமது பங்கை ஆற்ற வேண்டும். தடுப்பூசிகளும் கூடுதல் தடுப்பூசிகளும் செயல்திறன்மிக்கவையாக உள்ளன. அதனால்தான் நடமாடும் தடுப்பூசிக் குழுக்களை ஏற்படுத்தி வருகிறோம்," என்றார் துணைப் பிரதமர்.
அத்துடன், வழக்கமான தனிமனிதர்களுக்கான முன்னெச்சரிக்கைகளும் நீடிக்கின்றன.
"வெளிப்புறத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்றபோதும் முகக்கவசம் அணிவதைத் தொடரும்படி மக்களை ஊக்குவிக்கிறோம். கூட்டமான இடத்திற்குச் சென்றால் தயவுசெய்து முகக்கவசம் அணியுங்கள். உடல்நலமில்லை என்றால் வெளியில் சென்று, நண்பர்களுடன் சேர்ந்து உணவருந்துவதைத் தவிர்க்கவும்.
"முடிந்த அளவிற்கு, அவ்வப்போது சுயமாக கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ளுங்கள். அதிலும் குறிப்பாக கிருமி தொற்றியோருடன் தொடர்பில் இருந்தால் அல்லது மூத்த குடிமக்கள் எவரையும் பார்க்கச் செல்வதாக இருந்தால் சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள்," என்று திரு வோங் அறிவுறுத்தியுள்ளார்.