ஆப்பிரிக்கக் கண்டத்திற்கான தொழில்நுட்ப உதவியை வலுப்படுத்தும் புதிய திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த அரசாங்க அதிகாரிகளுக்கு நீடித்த நிலைத்தன்மை, மின்னிலக்கமயப்படுத்தல் போன்ற துறைகளில் சிங்கப்பூர் பயிற்சியளிக்கும்.
அந்த மூன்றாண்டு சிங்கப்பூர்-ஆப்பிரிக்கப் பங்காளித்துவத் தொகுப்புத் திட்டமானது, மூத்த ஆப்பிரிக்க அதிகாரிகள் சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில உபகாரச் சம்பளங்களையும் வழங்கும்.
சிங்கப்பூர் ஒத்துழைப்புத் திட்டத்தின்கீழ் ஆப்பிரிக்க அதிகாரிகளுக்குப் பாடப்பிரிவுகளில் முன்னுரிமை அளிக்கப்படும்.
அதிகாரபூர்வப் பயணமாக ருவாண்டா சென்றுள்ள பிரதமர் லீ சியன் லூங் நேற்று இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
கடந்த 1992ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சிங்கப்பூர் ஒத்துழைப்புத் திட்டத்தின்கீழ், இதுவரை 180 நாடுகளைச் சேர்ந்த 137,000க்கும் அதிகாரிகள் பாடப்பிரிவுகளிலும் பயிலரங்குகளிலும் பங்கேற்றுள்ளனர்.
"ஆப்பிரிக்காவிற்கு முன்னுரிமை அளிக்கக்கூடிய துறைகளில் பாடப்பிரிவுகளை வகைப்படுத்துவோம். பருவநிலை மாற்றம், நீடித்த நிலைத்தன்மை, மின்னிலக்கமயப்படுத்தல், அறிவார்ந்த நகரங்கள் உள்ளிட்ட துறைகளை அவை உள்ளடக்கும்," என்று செய்தியாளர்களிடம் திரு லீ கூறினார்.
சிங்கப்பூர் ஒத்துழைப்புத் திட்டத்திற்கு ஆப்பிரிக்கவில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும் ருவாண்டா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 12,000க்கும் மேலானோர் சிங்கப்பூரின் பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயின்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ருவாண்டா தலைநகர் கிகாலியில் அந்நாட்டு அதிபர் பால் ககாமேயைப் பிரதமர் லீ நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது இருதரப்பு உறவுகளை மறுவுறுதிப்படுத்திய தலைவர்கள் இருவரும், துறைசார்ந்த ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசித்தனர். பின்னர் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
ஆப்பிரிக்காவிற்கு முதன்முறையாகச் சென்றுள்ள பிரதமர் லீ, கிகாலியில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இரண்டு நாள் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.