தற்போதைய கொவிட்-19 தொற்று அலையைச் சிங்கப்பூர் கடந்து செல்ல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக்கத் தேவையில்லை என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வரும் வேளையில் மருத்துவமனைகள் இந்நிலையைச் சமாளித்து வருகின்றன என்று அவர் சுட்டினார். தற்போதைய கொவிட்-19 சம்பவங்கள் பிஏ.4, பிஏ.5 ரக புதிய ஓமிக்ரோன் திரிபுகளால் ஏற்பட்டவை என்றும் அவர் சொன்னார்.
ஹஜ் பெருநாளை முன்னிட்டு அர்-ரவுதா பள்ளிவாசலுக்கு இன்று வருகை தந்த துணைப் பிரதமர் செய்தியாளர்களிடம் இதனைச் சொன்னார்.
கடந்த சில வாரங்களாக அதிகரித்த கிருமித் தொற்று எண்ணிக்கை முதலில் கவலையுற்றதாக திரு வோங் கூறினார்.
"எனினும் புதிய கட்டுப்பாடுகள் எவற்றையும் செயல்படுத்தாமல் தற்போதைய கொவிட்-19 அலையை நம்மால் கடந்து செல்ல முடியும். இதுவே எங்கள் கணிப்பு.
"இந்த பெருந்தொற்று இன்னும் முடியவில்லை என்பதற்கான நினைவூட்டல் இது. நாம் அனைவருமே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும்," என்று அவர் அறிவுறுத்தினார்.