சிங்கப்பூரில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலான குடும்பங்கள் 10 'ஏஆர்டி' பரிசோதனைக் கருவிகளை அஞ்சல்பெட்டி வழி பெற்றுக்கொண்டு உள்ளன.
ஜூலை 18ஆம் தேதி தொடங்கிய தேசிய அளவிலான மூன்றாவது 'ஏஆர்டி' விநியோகத் திட்டத்தின்கீழ் கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த சுகாதார அமைச்சு, ஜூலை 31ஆம் தேதிப்படி சுமார் 600,000 குடும் பங்கள் ஏஆர்டி பரிசோதனைக் கருவிகளைப் பெற்றுக்கொண்டு உள்ளதாகத் தெரிவித்தது.
எஞ்சிய ஒரு மில்லியன் குடும்பங்களுக்கு செப்டம்பர் நடுப்பகுதிக்குள் கருவிகள் வந்துசேரும் என்று அமைச்சு கூறியது.
சிங்போஸ்ட் கைப்பேசிச் செயலியைப் பயன்படுத்துவதன் மூலம் ஏஆர்டி பரிசோதனைக் கருவிகள் வந்துசேர்ந்துவிட்டனவா என்பதை மக்கள் தெரிந்துகொள்ளலாம்.
கருவிகள் அஞ்சல்பெட்டிகளில் வந்துசேர்ந்துவிட்டவுடன் அவர்களுக்குத் தகவல் அளிக்கப்படும்.
அதிகமான பரிசோதனைக் கரு விகளை விநியோகிக்க வேண்டிஉள்ளதால், சில குடும்பங்கள் அவற்றைப் பெற்றுக்கொள்ள ஒரு சில வாரங்கள் ஆகலாம் என்று சுகாதார அமைச்சு கடந்த மாதம் தெரிவித்து இருந்தது.
ஜூலை 18ஆம் தேதி ஏஆர்டி விநியோகத் திட்டத்தைத் தொடங்கிவைத்த சுகாதார அமைச்சர் ஓங் யி காங், சுயமாக கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்வது "நம் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாகிவிட்டது" என்று கூறினார்.
சளி, தொண்டைவலி அல்லது காய்ச்சல் உள்ளவர்கள், நாள்தோறும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அறிகுறிகள் தோன்றிய ஒரு சில நாள்களுக்குப் பிறகே கொவிட்-19 தொற்று உறுதியாகலாம் என்பதே இதற்குக் காரணம்.
பொறுப்புள்ள முறையில் நடந்து கொள்வதே இப்போதைய தொற்று அலையைச் சமாளித்து மீண்டுவர நமக்கு மிக முக்கியமானது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதற்கு முந்திய இரு ஏஆர்டி விநியோகத் திட்டங்கள் மூலம் கிட்டத்தட்ட 25 மில்லியன் ஏஆர்டி கருவிகளை அரசாங்கம் வழங்கி இருந்தது. முதல் விநியோகத் திட்டம் 2020 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் இரண்டாவது திட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலும் இடம்பெற்று இருந்தன.
இவ்விரு திட்டங்கள் மூலம் ஒவ்வொரு குடும்பமும் மொத்தம் 16 பரிசோதனைக் கருவிகளைப் பெற்றுக்கொண்டன.