சீனா நடத்திவரும் போர்ப் பயிற்சி, தைவானில் தாக்குதல் நடத்தும் பாவனைப் பயிற்சியைப்போல் தெரிவதாக தைவான் கூறியிருக்கிறது. சீன போர் விமானங்களும் போர்க் கப்பல்களும் தைவான் நீரிணைப் பகுதி எல்லையைக் கடந்துள்ள வேளையில் தைவான் இவ்வாறு கூறியுள்ளது. தைவான் அதன் பதில் நடவடிக்கையாக வானொலி எச்சரிக்கையை விடுத்து, விமானம் மற்றும் கடற்படைக் கப்பல்களையும் அனுப்பியுள்ளதாக தைவானிய தற்காப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற நாயகர் நேன்சி பெலோசி தைவானுக்கு மேற்கொண்ட பயணம், சீனாவைக் சினமடையச் செய்துள்ளது. இதற்குப் பதிலடி தரும் விதமாக, முக்கிய விவகாரங்களில் வாஷிங்டனுடன் ஒத்துழைப்பை நிறுத்திக்கொள்வதாக சீனா அறிவித்து உள்ளது.
குறிப்பாக, பருவநிலை மாற்றமும் தற்காப்பு ஒத்துழைப்பும் இந்த விவகாரங்களில் அடங்கும். உலகளவில் காற்று மாசுபாட்டிற்கு பெருமளவு பங்கு வகிக்கும் அமெரிக்காவும் சீனாவும் அடுத்த பத்து ஆண்டுகளில் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான செயல்பாட்டை விரைவுபடுத்த உறுதிபூண்டு இருந்தன. ஆனால், இப்போது இந்த உடன்பாடு ஆட்டங்கண்டுள்ளது.
தைவானைச் சுற்றி சீனா அதன் போர்ப் பயிற்சியை நேற்றும் தொடர்ந்தது. தைவான் மீது படையெடுக்கவே சீனா இதைச் செய்து வருவதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
தைவானின் கரையோரப் பகுதிகளை சீனப் படைகள் எந்த அளவுக்கு நெருங்கிவிட்டன என்பதைக் காட்டும் விதமாக, தைவானின் கரையோரப் பகுதிகளையும் மலைகளையும் விமானி அறையில் இருந்து ஆகாயப் படை விமானி ஒருவர் படமெடுப்பதைக் காட்டும் காணொளி ஒன்றை சீன ராணுவம் நேற்று முன்தினம் வெளியிட்டது.
சீன ஏவுகணைகள் தைவானுக்கு மேலே நேரடியாகப் பறந்ததாக சீன அரசாங்க ஊடகமான சிசிடிவி தெரிவித்தது. இத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டால் பதற்றநிலை அதிகரித்திருப்பதையே காட்டும்.
எனினும், சீனாவின் இந்த மிரட்டலுக்கு தான் அடிபணியப் போவதில்லை என்று தைவான் கூறி வருகிறது. 68 சீனப் போர் விமானங்களும் 13 போர்க்கப்பல்களும் தைவான் நீரிணைப் பகுதிக்குள் நுழைந்துவிட்டதாக நேற்று முன்தினம் தைவான் கூறியது.
இந்நிலையில், சீனா நடத்திவரும் பெரிய அளவிலான, தீவிரமான போர்ப் பயிற்சிக்கு அமெரிக்காவும் இதர ஜனநாயக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்காவுக்கான சீனத் தூதரை நேரில் அழைத்த வெள்ளை மாளிகை, சீனாவின் செயல்பாடு குறித்து அவரிடம் கண்டனம் தெரிவித்தது. பருவநிலை மாற்றம் குறித்த ஒத்துழைப்பில் இருந்து வெளியேற சீனா எடுத்துள்ள முடிவு, பூமியின் எதிர்காலம் குறித்த கவலையைப் பரவலாக்கியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய பாதுகாப்பு மன்றப் பேச்சாளர் ஜான் கிர்பி, சீனாவின் இந்த முடிவு அடிப்படையில் பொறுப்பற்றது என்று விமர்சித்தார்.
"உலகம் முழுவதையும் சீனா தண்டிக்கிறது. ஏனெனில், பருவநிலை மாற்றம் நாட்டு எல்லைகளுக்கு அப்பாற்பட்டது," என்றார் அவர்.