தேசிய தினத்தன்று மரினா பே மிதக்கும் மேடையில் தரையிறங்கியபோது நிலைதவறிய செஞ்சிங்கம் வான்குடை வீரரின் உடல்நிலை சீராக உள்ளது.
அவர் மருத்துவமனையில் உடல்நிலை தேறி வருகிறார் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்துள்ளார்.
தேசிய தின அணிவகுப்பில் தரையிறங்கியபோது நிலைதவறிய மூன்றாம் வாரண்ட் அதிகாரி ஜெப்ஃரி ஹெங்குக்கு சில காயங்கள் ஏற்பட்டன.
ஆனால் அவருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படவில்லை என்று டாக்டர் இங் புதன்கிழமை (ஆகஸ்ட் 10) அன்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
அவரது ஃபேஸ்புக் பதிவில் மருத்துவமனைப் படுக்கையில் மூன்றாம் வாரண்ட் அதிகாரி ஜெப்ஃரி ஹெங் புன்னகைத்தபடி இருக்கும் புகைப்படமும் பதிவேற்றப்பட்டது.
தற்காப்புப் படைத் தலைவரும் ராணுவத் தலைவரும் திரு ஹெங்கை மருத்துவமனையில் சென்று பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தேசிய தின அணிவகுப்பில் பங்குபெற்ற பத்து வான்குடை வீரர்களில் மூன்றாம் வாரண்ட் அதிகாரி ஹெங் கடைசியாக தரையிறங்கினார்.
அவர் மிகவும் வேகமாக தரையிறங்கிய காட்சி நேரடியாக மிதக்கும் மேடையிலிருந்து பார்த்தவர்களையும் வீட்டிலிருந்து பார்த்தவர்களையும் பதைபதைக்க வைத்தது.
வான்குடை வீரர் நிலைதவறி விழுந்ததை அடுத்து, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மிதக்கும் மேடையில் தரையிறங்குவது சிக்கலானது என்று சிங்கப்பூர் ராணுவம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.
நேர் எதிர் திசைகளில் வீசும் பலத்த காற்று, அலையடிக்கும்போது வீசும் காற்று, காற்றோட்டம் தடைபடுதல் போன்றவை அதற்குக் காரணம் என்று ராணுவம் விளக்கியது.
தாம் பெற்ற பயிற்சியை நடைமுறையில் செய்ததால், மூன்றாம் வாரண்ட் அதிகாரி ஜெப்ஃரி ஹெங்கால் பலத்த காயங்களைத் தவிர்க்க முடிந்தது என்று சிங்கப்பூர் ராணுவம் குறிப்பிட்டது.