பொன்மணி உதயகுமார்
ரசிகர்களுக்கு வித்தியாசமான ஓர் இசைவிருந்தைத் தாம் வழங்கப்போவதில் தமக்குச் சந்தேகம் இல்லை என்றும் அது என்ன என்பதை இசை நிகழ்ச்சியின்போது ரசிகர்கள் உணர்வார்கள் என்றும் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் உறுதியளித்துள்ளார் இசைஞானி இளையராஜா.
"ஆனால் ரசிகர்களின் ரத்தத்தில், நரம்பில், நாடியில், ஊறிப் போன பாடலைக் கேட்டும் அந்தச் சுவையை ரசிக்கவும்தான் வருகிறார்கள்," என்று நகைச்சுவையாகக் கூறிய பின்னர் இசைநிகழ்ச்சியின் மற்ற சுவாரசியமான அங்கங்களைப் பற்றி மேலும் விவரித்தார் அவர்.
போன விஸ்தாவில் அமைந்துள்ள ஸ்டார் விஸ்தா அரங்கில் நாளை நடைபெறவிருக்கும் 'இசை ராஜாங்கம்' நிகழ்ச்சியில் இசை விருந்தளிக்க சிங்கப்பூர் வந்துள்ள இசைஞானி இளையராஜா, நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு பேசினார்.
ஒவ்வொரு முறை இசையமைக்கும் போதும் தம்முடைய உடம்பில் அதிர்வு அலைகள் ஓடிக்கொண்டே இருப்பதாகக் கூறினார் இசைஞானி. ஒவ்வொரு முறையும் தான் தெரியாத இசையை அமைப்பதும் ரசிகர்கள் அதைக் கேட்டு கேட்டு ஊறிக் கிடப்பதும் தான் வியக்கும் ஒன்று என்றார். அது இறைவன் தமக்குக் கொடுத்த கருணையாகத் தாம் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.
புதிய பாடகர்களை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் அவர்களைத் தாமே தேர்ந்தெடுத்து இருப்பதாகவும் திறமைமிக்க தரமான பாடகர்களாக அவர்கள் உள்ளனர் என்றும் உறுதியளித்தார். தம்முடன் இணைந்து பணியாற்றும் இசைக்குழுவினரே இசை மழை பொழியவுள்ளனர் என்றும் அவர் சொன்னார்.
சிங்கப்பூருடன் அவருக்கு இருக்கும் நெருங்கிய தொடர்பு குறித்து கூறுகையில் நிகழ்ச்சியில் 'அக்கரைச் சீமை அழகினிலே' பாடல் கண்டிப்பாக இடம்பெறும் என்றும் தெரிவித்தார். இதற்குமுன், 2018ஆம் ஆண்டு திரு இளையராஜா இதே அரங்கில் இசை நிகழ்ச்சி படைத்தார். ஏறத்தாழ 5,000 பேர் அமரக்கூடிய அரங்கில் நடைபெறும் நாளைய இசை நிகழ்ச்சி, கொவிட்-19 கிருமிப் பரவல் சூழலுக்குப்பின் நடைபெறவுள்ள முதல் மாபெரும் தமிழ் இசை நிகழ்ச்சியாகும்.