ஃபெர்ன்வேல் சமூக மன்றத்தின் திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் லீ
புதிய ஃபெர்ன்வேல் சமூக மன்றத்தில் அமைந்துள்ள உணவங்காடி நிலையமும் சந்தையும் சமையலுக்குத் தேவையான மூலப் பொருள்களை வாங்க குடியிருப்பாளர்களுக்கு வசதியை ஏற்படுத்தித் தருகின்றன. அங்குள்ள குறிப்பிட்ட சில கடைகளில் இந்த மூலப் பொருள்களைக் கொண்டு உணவு சமைக்க முடியும்.
சிங்கப்பூரில் இத்தகைய ஒரு சேவையை வழங்கும் முதல் உணவங்காடி நிலையம் மற்றும் சந்தையாக இது விளங்குகிறது.
ஃபெர்ன்வேல் சமூக மன்றத்தின் அதிகாரபூர்வ திறப்பு நிகழ்ச்சியில் நேற்று பேசிய பிரதமர் லீ சியன் லூங், இந்த வசதி குடும்பத்துக்கு உகந்ததாகவும் காற்றோட்ட வசதியுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
ஃபெர்ன்வேல் போன்ற புதிய நகர்களின் திட்டமிடுதலுக்கு கருத்தில் கொள்ளப்படும் விஷயங்களுக்கு இது ஒத்துப்போகிறது.
"பொது உள்கட்டமைப்பு வசதிகளுக்கு இதில் பெரிய பங்குண்டு. குடியிருப்பாளர்கள் ஒருவரையொருவர் சந்தித்து, கலந்துறவாடி, ஒற்றுமையை ஏற்படுத்த பொதுவான இடங்கள் தேவை.
"இதைக் கருத்தில் கொண்டே நாங்கள் ஃபெர்ன்வேல் சமூக மன்றத்தை வடிவமைத்தோம். இது சமூகத்துக்கான மையப்புள்ளியாக விளங்கி, ஃபெர்ன்வேலில் இருந்து மட்டுமல்ல, நமது குழுத்தொகுதிக்கும் அதற்கும் அப்பாற்பட்டு குடியிருப்பாளர்களை ஒன்றிணைக்க உதவும்," என்றார் பிரதமர் லீ.
அங் மோ கியோ குழுத்தொகுதியில் உணவங்காடி நிலையத்தையும் சந்தையையும் கொண்டுள்ள இரண்டாவது சமூக மன்றம் இதுவாகும்.
இங்கு 28 உணவங்காடிக் கடைகளும் 20 சந்தைக் கடைகளும் உள்ளன. இவ்விரு வசதிகளைக் கொண்டுள்ள முதலாவது சமூக மன்றம், ஹவ்காங்கில் உள்ள சி யுவான் சமூக மன்றமாகும்.
விலைக் கட்டுப்படியான, வசதியுடைய உணவுத் தெரிவுகளைப் பெற உணவங்காடி நிலையம் அமைக்கப்பட குடியிருப்பாளர்கள் பலர் கேட்டுக்கொண்டதாக அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான பிரதமர் லீ குறிப்பிட்டார்.
ஃபெர்ன்வேல் சமூக மன்றத்தைக் குடியிருப்பாளர்களுக்கு விருப்பமான ஒன்றாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார். குடியிருப்பாளர்களிடம் இருந்து கிடைத்த கருத்துகளின் அடிப்படையில் நிகழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, நல்வாழ்வு வகுப்புகளும் சமையல்கலை வகுப்புகளும் இங்கு இடம்பெறுகின்றன.
24 மணி நேர உடற்பயிற்சிக்கூடம், மெதுவோட்டம் ஓடுவதற்கான திடல் உள்ளிட்ட இதர வசதிகளும் இங்கு உள்ளன. குழந்தைப் பராமரிப்பு நிலையம், விளையாட்டு இடம், நடவடிக்கை அறைகள் போன்ற இளம் குடும்பங்களுக்கான சேவைகளும் இங்கு வழங்கப்படுகின்றன.
ஃபெர்ன்வேல் எம்ஆர்டி நிலையம், சிலேத்தார் மால் கடைத்தொகுதிக்கு அருகில் இச்சமூக மன்றம் அமைந்துள்ளது. அப்பகுதியில் கூடுதல் சாலைகள் திறக்கப்பட்டவுடன் சமூக மன்றத்துக்குச் சென்றுவருவது மேலும் வசதியாக இருக்கும் என்று பிரதமர் லீ கூறினார்.
புவாங்கோக் டிரைவ் நீட்டிப்புப் பணிகளுக்கான இரண்டாம் கட்டமும் சிலேத்தார், தெம்பனிஸ் விரைவுச்சாலைகளுடன் ஃபெர்ன்வேலை இணைக்கும் புதிய செங்காங் வெஸ்ட் டிரைவும் 2025 இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபெர்ன்வேல் சமூக மன்றத்துக்கான கட்டுமானப் பணிகள் 2018ஆம் ஆண்டில் தொடங்கின. ஆனால் கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக பணிகள் தாமதமடைந்தன.