இந்தோனீசியாவின் கிழக்கு ஜாவா காற்பந்துத் திடலில் மூண்ட கலவரத்தின் தொடர் பில் மாண்டோர் எண்ணிக்கை 125 என்று கிழக்கு ஜாவா துணை ஆளுநர் எமில் டார்டேக் நேற்று மாலை கூறினார்.
முன்னதாக, தவறானக் கணக்கெடுப்பால் 174 பேர் மாண்டதாக அறிவிக்கப்பட்டதென ராய்ட்டர்ஸ் கூறியது.
மாண்டோரில் பெரும்பாலானோர் கூட்ட நெரிசலில் சிக்கியும் மூச்சுத்திணறியும் உயிரிழந்தனர். உலகின் ஆக மோசமான காற்பந்து துயர் சம்பவங்களில் ஒன்றாக இது வகைப்படுத்தப்பட்டுள்ளது.
சனிக்கிழமை இரவு மாலாங் என்னும் இடத்தில் உள்ள விளையாட்டுத் திடலில் உள்ளூர் காற்பந்துப் போட்டிகள் நடைபெற்றபோது பெர்சிபாயா சுரபாயா அணி அரேமா காற்பந்து கிளப் அணியை 3-2 என்னும் கோல்
கணக்கில் தோற்கடித்தது.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளில் முதல்முறை அரேமா அணி அதன் பரம வைரியிடம் தோற்றதால் அதனைத் தாங்க இயலாத ரசிகர்கள் திடலுக்குள் இறங்கி வன்முறையில் ஈடுபட்டனர்.
அவர்களைக் கட்டுப்படுத்த முயன்ற காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி னர். அதனால், பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த பார்வையாளர்கள் பீதியடைந்து அரங்கிலிருந்து வெளியேற ஓடினர். ஒரேநேரத்தில் ஆயிரக்கணக்கானோர் வெளியேறும் வாயில் களை நோக்கி ஓடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கீழே விழுந்த பலர் மிதிபட்டு உயிரிழந்தனர். மேலும் பலர் மூச்சுத்திணறி இறந்தனர்.
விளையாட்டரங்கில் மட்டும் 34 பேர் உயிரிழந்ததாகவும் எஞ்சியோர் மருத்துவமனைகளில் மாண்டதாகவும் கிழக்கு ஜாவா காவல்துறை தலைமை அதிகாரி நிக்கோ ஆஃபின்டா கூறினார். மேலும், இரு காவலர்கள் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்ட அவர், மாண்டோரில் ஐந்து வயதுக் குழந்தையும் அடங்கும் என்றார்.
கலவரத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையின் வாகனங்களை அடித்து நொறுக்கியதோடு பல வாகனங்களுக்குத் தீ வைத்தனர். எரிந்து சேத மடைந்த அவை நேற்றுக் காலை எலும்புக்கூடாகக் காட்சியளித்தன.
இதற்கிடையே, விளையாட்டரங்கில் அனுமதிக்கப்பட்ட அளவைக்காட்டிலும் கூடுதலாக 4,000 பேருக்கு நுழைவுச்சீட்டு விற்கப்பட்டதாக இந்தோனீசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் முகம்மது மஹ்ஃபுட் மஹ்முதின் தெரிவித்தார். 38,000 பேருக்குப் பதில் 42,000 பேருக்கு நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டதாக அவர் தமது இன்ஸ்டகிராம் பதிவில் குறிப்பிட்டார்.
அதேநேரம், காற்பந்து விளையாட்டுக்கான பாதுகாப்பு அம்சங்கள் மறுஆய்வு செய்யப்படும் என்று 'கொம்பாஸ் டிவி' தொலைக்காட்சியிடம் இளையர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஸைனுதீன் அமாலி தெரிவித்தார். விளையாட்டரங்கிற்குள் பார்வையாளர்களை அனுமதிக்காமல் இருப்பது குறித்தும் பரிசீலிக்கப்படுவதாக அவர் சொன்னார்.
சம்பவம் குறித்து தாம் பெரிதும் வருந்துவதாகக் குறிப்பிட்ட இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, இதுவே நாட்டின் கடைசி காற்பந்துத் துயராக இருக்கும் என்று தாம் நம்புவதாகக் கூறினார். விசாரணைக்கு உத்தரவிட்ட அவர், விசாரணை முடியும்வரை 'பிஆர்ஐ லிகா 1' காற்பந்து லீக் ஆட்டங்களை நிறுத்தி வைக்குமாறு இந்தோனீசிய காற்பந்துச் சங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.
20 வயதுக்குற்பட்டோருக்கான ஃபிஃபா உலகக் கிண்ணப் போட்டிகளை அடுத்த ஆண்டு இந்தோனீசியா ஏற்று நடத்தவிருக்கும் வேளையில் இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது.