ரஷ்யா கைப்பற்றிய முக்கிய கோட்டையான லைமன் நகர் உக்ரேன் வசம் திரும்ப வந்துள்ளது. இந்த வெற்றியை உக்ரேனிய வீரர்கள் கொண்டாடி வருகின்றனர்.
உக்ரேனிடம் இருந்து கைப்பற்றிய நான்கு வட்டாரங்களை தன்னுடன் இணைத்துக்கொண்டதாக மார்தட்டியதற்கு மறுநாள் ரஷ்யாவுக்கு இந்தத் தோல்வி ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, குறைந்த சக்திவாய்ந்த அணுவாயுதங்களைப் பயன்படுத்தும் சாத்தியம் ரஷ்யாவுக்கு இருப்பதாக அதிபர் புட்டினுக்கு நெருங்கிய சகா ஒருவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்து உள்ளது.
உக்ரேனின் இரண்டாவது பெரிய நகரான கார்க்கிவிலிருந்து சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள லைமன் நகரை கடந்த மே மாதம் ரஷ்யா கைப்பற்றியது. அப்போதுமுதல் ரஷ்யப் படையினரின் தரைவழித் தொடர்புக்கும் தளவாடப் பயன்பாட்டுக்கும் ஒரு முக்கிய இணைப்பாக அந்நகர் இருந்து வந்தது.
சனிக்கிழமை உக்ரேனியப் படைவீரர்கள் சுற்றிவளைத்ததைத் தொடர்ந்து ரஷ்யப்படை பின்வாங்கி அங்கிருந்து வெளியேறியது. அந்நகரின் மத்திய பகுதியில் நின்று கொண்டு உக்ரேனிய வீரர்கள் காணொளிப் படம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். உக்ரேனின் ஆயுதப்படை லைமன் நகரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக அதில் அவர்கள் வெற்றிக்களிப்பை வெளிப்படுத்தினர்.
அங்கிருந்த நகரமன்றக் கட்டடத்தின் உச்சியில் பறந்த ரஷ்யக் கொடியை கீழே இறக்கிய உக்ரேனிய வீரர்கள் அதனை வீசி எறிவதும் அந்தக் காணொளிப் பதிவில் இடம்பெற்றிருந்தது.
இந்த வெற்றி தொடரும் என்றும் அடுத்த இலக்கு டோன்பாஸ் வட்டாரம்தான் என்றும் உக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். டோன்பாஸ் வட்டாரம் ரஷ்யாவின் பிடியிலுள்ள டொ னேட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய வட்டாரங்களை ஒட்டி உள்ளது.
"டோன்பாஸ் வட்டாரத்தில் பறக்கும் உக்ரேனிய கொடிகளின் எண்ணிக்கை கடந்த வாரம் அதிகரித்தது. இந்த வாரம் இது இன்னும் அதிகமாகும்," என திரு ஸெலென்ஸ்கி தமது காணொளி உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், லைமன் நகரை உக்ரேன் கைப்பற்றியிருப்பது ரஷ்ய ராணுவத்திற்கு புதிய தலைவலியைக் கொடுக்கும் என்று அமெரிக்க தற்காப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.
"இப்போதுள்ள நிலவரம் எங்களுக்கு உற்சாகம் அளிக்கிறது," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.