சிங்கப்பூரில் இவ்வாண்டுக்கான எஃப்1 கார் பந்தயத்தைக் காண சாதனை அளவாக 302,000 பேர் திரண்டதாக சிங்கப்பூர் கிராண்ட் பிரி அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த மூன்று நாள் நிகழ்வைக் காண வந்தோர் எண்ணிக்கை சிங்கப்பூர் இரவு நேர கார் பந்தய வரலாற்றில் இதுவே ஆக அதிகம்.
இதற்கு முன்னர் 2008ஆம் ஆண்டு எஃப்1 கார் பந்தயம் முதல்முறையாக நடைபெற்றபோது அதனைக் காண 300,000 பேர் வந்ததே இதுவரை சாதனையாக இருந்தது. இந்த ஆண்டின் எண்ணிக்கை அதனை முறியடித்துவிட்டது.
கொவிட்-19 காலத்தைக் கடந்து ஈராண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற போட்டியைக் காண உள்ளூர் மக்களுக்கு நிகராக உலகப் பார்வையாளர்களும் வந்து குவிந்தனர். மொத்த எண்ணிக்கையில் வெளிநாட்டுப் பார்வையாளர்களின் விகிதம் 49%.
ஆகக் கடைசியாக 2019ஆம் ஆண்டு நடந்த எஃப்1 பந்தயத்தைக் காண 268,000 பேர் வந்திருந்தனர். 2020, 2021 ஆண்டுகளுக்கான பந்தயம் கொவிட்-19 பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
"இந்த அளவுக்குப் பார்வையாளர்கள் திரண்டிருப்பது நாம் நடத்தும் கார் பந்தயத்தின் மீதான ஆர்வத்தையே பிரதிபலிக்கிறது," என்று போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "சிங்கப்பூர் மீட்சிகண்டு வருவதை உணர்த்தும் மிகவும் அருமையான அறிகுறி இது. சாதனை அளவாகப் பார்வையாளர்கள் வந்திருப்பது பரந்த பொருளியலுக்குரிய சாதகமான அம்சம்.
"ஹோட்டல்களில் தங்குவோர் விகிதம் மிகவும் வலுவடைந்துள்ளது. சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் தரவுகளின்படி, ஹோட்டல் அறைகளின் வாடகையும் சாதனை அளவாக ஓர் இரவுக்கு சராசரியாக $440 என்று உயர்ந்
திருக்கிறது," என்றார் திரு ஈஸ்
வரன்.
சந்திப்புக் கூட்டங்கள், மாநாடு கள் மற்றும் கண்காட்சிகள் என்னும் அம்சங்களை உள்ளடக்கிய குறைந்தபட்சம் 25 நிகழ்வுகள் இடம்பெற்றதையும் பந்தய காலத்தையொட்டி கிட்டத்தட்ட 90,000 பேராளர்கள் இங்கு வருகைபுரிந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
"ஒட்டுமொத்தத்தில், இந்த ஆண்டின் ஃபார்முலா 1 பந்தயம் மிகவும் வலுவான ஒன்றாக அமைந்துள்ளது. உலகம் முழுவதும் இருந்து வலுவான ஆதரவு கிடைத்துள்ளது.
"சிங்கப்பூர் மீண்டும் பழைய பாதைக்குத் திரும்பிவிட்டது என்று சொல்லலாம்," என்றும் திரு ஈஸ்
வரன் தெரிவித்தார்.
2008ல் இரவுநேர கார் பந்தயம் தொடங்கப்பட்டதுமுதல் சுற்றுப்பயணிகள் மூலம் $1.5 பில்லியனுக்கும் மேல் வருவாய் கிடைத்துள்ளது.
அத்துடன் பந்தயம் நெருங்கும் சமயத்தில் வரும் ஒவ்வொரு வாரஇறுதியிலும் பந்தயச் சுற்றின் வட்டாரத்தில் 30,000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பும் கிட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஃப்1 கார் பந்தயத்திற்காக ஒவ்வோர் ஆண்டும் செலவாகும் $135 மில்லியனில் 60% தொகையை வர்த்தக, தொழில் அமைச்சும் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகமும் வழங்குகின்றன.
எஞ்சிய தொகைக்கு 'சிங்கப்பூர் கிராண்ட் பிரி' அமைப்பு பொறுப்பு ஏற்கிறது.