கொவிட்-19க்கு பிறகு வருங்காலத்தில் பெருந்தொற்றுகளைச் சமாளிக்க ஆய்வு, மேம்பாட்டுத் திட்டத்தை சிங்கப்பூர் தொடங்கியுள்ளது. பெருந்தொற்றுகளை எதிர்கொள்வதற்கு தொற்றுநோய் நிபுணர்களை சிங்கப்பூர் ஒன்றுதிரட்ட இத்திட்டம் வகைசெய்யும்.
கொள்ளைநோய் தயார்நிலை, பதில் நடவடிக்கைக்கான ஆய்வுத் திட்டம் (Prepare), தொற்றுநோய்களை எதிர்கொள்ள வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களையும் அரசாங்க அமைப்புகளையும் இணைக்கும்.
மேலும், சிங்கப்பூருக்கு அப்பாற்பட்டு ஆய்வுப் பங்காளித்துவத்தை வலுப்படுத்தி, தகவல்களைப் பகிர்ந்து, அனைத்துலக அளவில் கழகங்களுடன் சேர்ந்து இத்திட்டம் செயல்படும்.
டியுக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் வாங் லின்ஃபாவும் தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தின் பேராசிரியர் டேவிட் லாயும் இத்திட்டத்தை வழிநடத்துவர்.
சுகாதார அமைச்சர் ஓங் யி காங் வியாழக்கிழமை (நவம்பர் 3) இத்திட்டத்தைத் தொடங்கிவைத்தார். கொவிட்-19க்கு எதிராக சிங்கப்பூரின் பதில் நடவடிக்கையில், சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடிய திறன், முக்கியமான ஓர் அம்சமாக இருந்து வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கொவிட்-19 பெருந்தொற்றின் மூலம் பெறப்பட்டுள்ள அனுபவத்தின் மூலம், வருங்காலத்தில் தொற்றுநோய்களுக்கு எதிராக சிங்கப்பூர் அதன் தயார்நிலையை மேலும் மேம்படுத்திக்கொள்ளும் என்றும் அவர் சொன்னார்.