உணவு, எரிசக்தி பிரச்சினையைக் கையாள மூன்று பரிந்துரைகளை ஜி20 உச்சநிலை மாநாட்டில் முன்வைத்தார் பிரதமர் லீ சியன் லூங்.
சட்டத்தின் அடிப்படையிலான பன்முனை வர்த்தக முறையை வலுப்படுத்துவது, ஒன்றுசேர்ந்து கரியமில வெளியேற்றத்தை குறைப்பது, நீடித்த நிலைத்தன்மைக்கான நிதியாதரவை அதிகரிப்பது ஆகிய மூன்று பரிந்துரைகளை உச்சநிலை மாநாட்டின் முதல் கலந்துரையாடலில் பகிர்ந்தார்.
இந்தோனீசியாவின் பாலித் தீவில் நடந்துவரும் ஜி20 மாநாட்டில் கூடிய உலகத் தலைவர்கள் முன்னிலையில் பிரதமர் லீ இந்தக் கருத்துகளை முன்வைத்தார்.
'ஒன்றாக மீள்வோம், வலுவாக மீள்வோம்' என்ற கருப்பொருளில் நடைபெறும் உச்சநிலை மாநாட்டில் ஜி20 உறுப்பினர்களும் நட்பு நாடுகளாக அழைக்கப்பட்டுள்ள சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
உணவு, எரிசக்தி பாதுகாப்பு என்ற தலைப்பில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 15) காலை முதல் கலந்துரையாடல் நடைபெற்றது.
சிறிய தீவு அளவிலான சிங்கப்பூர் உணவு, எரிசக்தி தேவைகளுக்கு இறக்குமதியையே நம்பி இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அதன் மூலதனத்தை சரியாக நிர்வகிப்பதன் முக்கியத்துவத்தை சிங்கப்பூர் நீண்ட காலமாக அறிந்துள்ளதாகக் கூறினார்.
உலகளாவிய விநியோகச் சங்கிலியை திறந்த வகையில் தடையில்லாமலும் வைத்திருக்க பங்காளிகளுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக அவர் சொன்னார்.
நம்பகத்தன்மையுடனான தளவாட, போக்குவரத்து, எரிசக்தி மையமாக சிங்கப்பூர் அதன் பொறுப்பை சீரிய முறையில் மேற்கொள்ளும் என்று அவர் நம்பிக்கை அளித்தார்.
உணவு, எரிசக்தி பாதுகாப்பிற்கான நீண்ட கால அச்சுறுத்தலாக பருவநிலை மாற்றம் உள்ளது என்று கூறிய அவர், 2050க்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை முற்றிலும் அகற்றும் நோக்கத்தில் சிங்கப்பூரின் திட்டங்களை பட்டியலிட்டார்.
கரியமில வரியைக் கணிசமாக ஏற்றுவது, எரிசக்தி துறையின் பசுமைப் புரட்சிக்கு தேசிய ஹைட்ரோஜன் உத்தியை செயல்படுத்துவது, ஆசியானுடன் இணைந்து வட்டார எரிசக்தி தொடர்பு கட்டமைப்பையும் பாதுகாப்பையும் மேம்படுத்துவது ஆகியவற்றை பகிர்ந்தார்.
பசுமை எரிசக்திக்கு மாறுவதற்கு நாடுகளுக்கு நிதி தேவைப்படும் என்பதால் அதற்கான ஆதரவுத் திட்டங்கள் உருவாகவேண்டும் என்றார் பிரதமர் லீ.
ஆசிய மேம்பாட்டு வங்கியின் எரிசக்தி மாற்று திட்டத்தை மேற்கோள் காட்டி பேசிய அவர், தனியார் துறை முதலீடுகளும் தேவை என்றார்.
ஆசிய பருவநிலை தீர்வுகள் வடிவமைப்பு மானியத்தை சிங்கப்பூர் நாணய ஆணையம் உருவாக்கியுள்ளதைச் சுட்டிய திரு லீ, நீடித்த நிலைத்தன்மையுடனான உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு தனியார் துறை பங்கெடுப்பை எப்படி சிங்கப்பூர் ஊக்குவிக்கிறது என்பதற்கான ஓர் எடுத்துக்காட்டு என்றார்.