செயலிகளின் அடிப்படையில் வேலை பார்க்கும் இணையவழி இணைப்புத்தள விநியோக ஊழியர்கள், டாக்சி ஓட்டுநர்கள், தனியார் வாடகை கார் ஓட்டுநர் கள் ஆகியோர் வேலை பார்க்கை யில் காயமடையும் பட்சத்தில் காப்புறுதிப் பாதுகாப்பைப் பெறவிருக்கிறார்கள்.
மத்திய சேமநிதிச் சந்தா தொகையும் அவர்கள் கணக்கில் சேரவிருக்கிறது. சிங்கப்பூரில் இத்தகைய ஊழியர்கள் ஏறக் குறைய 73,000 பேர் உள்ளனர்.
அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு உதவும் பெரிய அளவிலான கொள்கைகள் நடைமுறைக்கு வரவிருக்கின்றன.
அதன்படி, அத்தகைய ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள், தரப்படுத்தப்பட்ட காப்புறுதிப் பாதுகாப்பை அவர்களுக்கு வழங்க வேண்டி இருக்கும். வேலை பார்க்கும்போது ஊழியர்கள் காயமடைந்தால் அவர்களுக்கு இந்த ஏற்பாடு பலனளிக்கும்.
மத்திய சேமநிதிச் சந்தாவைப் பொறுத்தவரை, 30 வயதை எட்டாதவர்களுக்கு மட்டுமே அது கட்டாயமாக்கப்படும். மற்றவர்களைப் பொறுத்தவரை விரும்பினால் சேர்ந்துகொள்ளலாம்.
இவற்றுக்கு வகைசெய்யும் புதிய கொள்கைகள் முடிந்த வரை விரைவாக 2024 பிற்பகுதியில் நடப்புக்கு வரும்.
இணையவழி இணைப்புத்தள ஊழியர்கள் ஆலோசனைக் குழு பரிந்துரைகளை அரசாங்கம் நேற்று ஏற்றுக்கொண்டது.
அதனையடுத்து இவை நடைமுறை சாத்தியமாகின்றன. அந்தக் குழு 60 பக்க அறிக்கையை அரசாங்கத்திடம் தாக்கல் செய்தது.
இந்த மாற்றங்கள் காரணமாக இத்தகைய ஊழியர்களுக்குக் கிடைக்கக்கூடிய அடிப்படை பாதுகாப்பு ஏற்பாடுகள், இதர துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்குக் கிடைக்கும் அளவிற்கு இருக்கும்.
இதர துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு வேலையிட காய இழப்பீட்டுச் சட்டம் பாதுகாப்பு அளிக்கிறது. அவர்கள் மத்திய சேம நிதிக்குத் தங்கள் பங்குச் சந்தாவைச் செலுத்த வேண்டும்.
இத்தகைய ஊழியர்களுக்கு உரிய சேமநிதிச் சந்தா விழுக்காடு, இதர துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்குரிய விழுக்காட்டு அளவை எட்ட ஐந்தாண்டுகள் ஆகும் என குழு தெரிவித்துள்ளது.
குறைவான விகிதத்தில் இருந்து அந்தச் சந்தா தொடங்கும். பெரிய அளவிலான பொருளியல் பாதிப்புகள் இருந்தாலொழிய ஆண்டுக்கு 2.5% முதல் 3.5% வரை அது கூடும்.
பரிந்துரைகளை உருவாக்கும் முயற்சியில், இணையத் தளங்களைப் பயன்படுத்தும் 2,700 பேரை அணுகி இந்தக் குழு கருத்துக் கேட்டது. அவர்களில் 91 விழுக்காட்டினர் விநியோகத் தள ஊழியர்களுக்கு உதவி வேண்டும் என்று கருத்து கூறினர்.
அத்தகைய ஊழியர்களுக்குச் சிறப்பான பாதுகாப்பை வழங்கும் வகையில், அவர்களின் சேவைக்கு கூடுதலாக பணம் தர தாங்கள் தயார் என்றும் அவர்கள் கூறினர்.