மலேசியாவில் நடந்த பொதுத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பக்கத்தான் ஹரப்பான் தரப்பில் அன்வார் இப்ராஹிம் தலைமையில் கூட்டு அரசாங்கத்தை அமைக்க முயற்சிகள் இடம்பெறுகின்றன.
அதேவேளையில், பெரிக்காத்தான் நேஷனல் அணி முகைதீன் யாசின் தலைமையில் கூட்டு அரசாங்கத்தை அமைக்க மறுபக்கம் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது.
இந்த நிலையில், தேர்தலில் வெறும் 30 இடங்களில்தான் வென்று இருக்கிறது என்றாலும் பாரிசான் நேஷனல் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதில் முக்கியமான முடிவு எடுக்கும் சக்தியாக இருப்பதாகத் தெரிகிறது.
பாரிசான் நேஷனல் தலைவர்கள் நேற்று மாமன்னரைச் சந்தித்தார்கள். ஐக்கிய அரசில் அங்கம் வகிக்கும்படி பாரிசான் நேஷனலை மாமன்னர் கேட்டுக்கொண்டதாக தெரியவந்துள்ளது. இந்த யோசனையை அன்வார் இப்ராஹிம் தாராளமாக வரவேற்று இருக்கிறார்.
மாமன்னரைச் சந்தித்த பிறகு பேசிய பாரிசான் நேஷனல் தலைவர் ஸாகித் ஹமிடி, ஐக்கிய அரசை அமைக்கும்படி மாமன்னர் உத்தரவிட்டு இருப்பதாகத் தெரிவித்தார்.
இதனிடையே, பாரிசான் நேஷனலின் முக்கிய கட்சியான அம்னோவின் தலைவர் ஸாகித், மன்னருக்கு அனுப்பிய ஒரு கடிதத்தை தான் பார்த்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
பாரிசான் நேஷனல் அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாரும் அன்வாருக்கு ஆதரவு அளிப்பதாக அந்தக் கடிதத்தில் உறுதி தெரிவித்துள்ளதாக அது மேலும் கூறியது.
ஆனால் யாரை ஆதரிப்பது என்பதில் பாரிசான் நேஷனல் தலைவர்களிடையே இணக்கம் இல்லை என்று அந்த அணியின் தலைவர்கள் நேற்று தெரிவித்தனர்.
மாமன்னரிடம் ஸாஹித் கடிதம் கொடுத்த விவகாரம் பற்றி கருத்து கூறிய மலேசிய சீனர் சங்க தலைமைச் செயலாளர் சோங் சின் ஊன், முதலில் கடிதத்தை மறுத்த ஸாஹித் பிறகு ஒப்புக்கொண்டதாகக் கூறினார்.
ஸாஹித் செயல் மாமன்னரை ஏமாற்றும் முயற்சி என்று அம்னோ முன்னாள் தலைமைச் செயலாளர் மூசா சாடினார். இந்நிலையில், மலேசிய மாமன்னர் இன்று நாட்டின் இதர மன்னர்களுடன் சிறப்புக் கூட்டம் நடத்தி நிலவரம் பற்றி விவாதிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.