ஹெண்டர்சன் ரோட்டில் உள்ள அடுக்குமாடி வீட்டில் தீயை அணைத்துக்கொண்டிருந்தபோது மயங்கி விழுந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தீயணைப்பு வீரர் உயிர் இழந்துவிட்டார். அவர் முழுநேர தேசிய சேவையாளர் ஆவார்.
அது குறித்து வியாழக்கிழமை (டிச. 8) மாலை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அறிக்கை விடுத்தது.
தீப்பிடித்துக் கொண்ட வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டின் சமையலறைப் பகுதியில் தேசிய சேவையாளர் மயங்கி விழுந்தார் என்று குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
அவரது குழுவினர் அவரை உடனடியாக அந்த வீட்டிலிருந்து வெளியே கொண்டு சென்று இதயம் மீண்டும் செயல்படுவதற்கான சிகிச்சையை மேற்கொண்டனர் என்று கூறப்பட்டது.
அந்த இடத்தில் இருந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆம்புலன்ஸ், தானியங்கி வெளிப்புற இதய இயக்கச் சாதனத்தைப் பயன்படுத்தியது.
அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு அவர் உயிர் இழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
தேசிய தேவையாளரின் மரணத்தால் துயரமடைந்துள்ளதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. அவரது குடும்பத்தாருக்கு அது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டது.
ஹெண்டர்சன் ரோடு புளோக் 91ன் நான்காவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் தீப் பிடித்துக் கொண்டது என்றும் அது பற்றி காலை 11.10 மணி அளவில் தகவல் கிடைத்ததாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் முன்னதாகக் கூறியிருந்தது.
தீயணைப்பு வீரர்கள் சென்றபோது வீட்டில் தீ கொளுந்துவிட்டு எரிந்ததாகவும் தாழ்வாரப் பகுதியில் புகை சூழ்ந்திருந்தாகவும் மாலையில் விடுக்கப்பட்ட அறிக்கை கூறியது.
சுவாச உதவிச் சாதனங்களை அணிந்துகொண்டு வீட்டுக் கதவை உடைத்து, குடிமைத் தற்காப்புப் படையினர் உள்ளே நுழைந்தனர்.