அனுஷா செல்வமணி
ஈராண்டுகளுக்குப் பிறகு தைப்பூசத் திருவிழா மீண்டும் களைகட்டி இருக்கிறது.
நேற்றுக் காலை 5 மணிக்கு தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலில் இருந்து கிளம்பிய வெள்ளி ரதம், சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நின்று அன்னையின் ஆசிபெற்று, பின்னர் காலை 7.30 மணியளவில் கியோங் செய்க் ரோடு அருள்மிகு லயன் சித்தி விநாயகர் ஆலயத்தைச் சென்று அடைந்தது.
மாலைவரை அங்கு மக்கள் அருள்மிகு தெண்டாயுதபாணிக்கு வழிபாடு செய்தனர். பின்னர் மாலை 5 மணிக்கு அங்கிருந்து ரதமேறிய முருகப்பெருமான், சிசில் ஸ்திரீட், ஹை ஸ்திரீட் வழியாக நகர்வலம் வந்து, இரவு தேங் ரோடு கோயிலை வந்தடைந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளி ரதத்துடன் காவடிகளின் ஊர்வலத்தையும் காணமுடிந்தது பக்தர்களுக்குக் களிப்பூட்டியது.
எனினும், வழக்கத்தைவிட வெகுகுறைவாக இவ்வாண்டு 25 காவடிகளே எடுக்கப்பட்டன.
கொள்ளைநோய் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தடைபட்டிருந்த இந்த விமரிசையான ரத ஊர்வலத்தில், விட்டுவிட்டுப் பெய்தபடியே இருந்த மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மகிழ்ந்தனர்.