இந்த ஆண்டிலிருந்து அதிகமான குடியிருப்பாளர்கள் நாடாளாவிய சமூக இடங்களில் யோகா, கிக் பாக்ஸிங் போன்ற உடற்பயிற்சிகளில் இலவசமாக ஈடுபடலாம். வாரம் தோறும் 31,000 பேர் பயன்பெறும் தனது உடல் பயிற்சித் திட்டங்களை கிட்டத்தட்ட 47,000 பேர் பயன்பெறும் வகையில் உயர்த்த உள்ளது சுகாதார மேம்பாட்டு வாரியம்.
சிங்கப்பூரின் வருமுன் காக்கும் முயற்சியான ‘ஹெல்தியர் எஸ்ஜி’ (மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி) திட்டத்தின்கீழ் இதனை வாரியம் செயல்படுத்துகிறது.
பிப்ரவரி 20ஆம் தேதி முதல் மாற்றியமைக்கப்பட்ட சிங்கப்பூர் உடல் பயிற்சி வழிகாட்டுதல் செயல்பாட்டுக்கு வருகிறது. அதன்படி நாள்தோறும் 10 முதல் 30 நிமிடங்கள் மிதமான மற்றும் தீவிரமான உடல் பயிற்சிகளையும் குறைந்தது 5,000 அடிகளையும் மேற்கொள்ள மக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இதற்கு ஏற்ப தேசிய நடை சவாலையும் வாரியம் மாற்றி அமைக்கும்.
விளையாட்டு மையங்கள், பூங்காக்கள், குடியிருப்புப் பேட்டைகள், முதியோர் நடவடிக்கை மையங்கள் போன்ற சமூக இடங்களில் வாரியத்தின் பொது மற்றும் தனியார் துறை பங்காளிகளுடன் இணைந்து இந்த நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
2022 ஜூன் மாதம் மாற்றிய மைக்கப்பட்ட தேசிய வழிகாட்டுதல் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட மக்களை ஊக்குகிறது.
குறிப்பாக, வயது வந்தோருக்கான உடற்பயிற்சி இலக்கு வரம்பு ஒரு வாரத்திற்கு 150 நிமிடங்கள் முதல் 300 நிமிடங்கள் வரை மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு பயிற்சிக்கும் குறைந்தபட்ச நேரம் இல்லை. எவ்வளவு நேரம் செய்தாலும் பயன் கிடைப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு உதவியாக தேசிய நடை சவாலும் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. இதன்படி, பங்கேற்பாளர்கள் ஒவ்வொரு முறையும் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது மிதமான முதல் தீவிரமான உடல் பயிற்சியில் ஈடுபட வேண்டும். 20 நிமிடம் அல்லது அதற்கு கூடுதலான நேர உடற்பயிற்சிக்கு வழங்கப்படும் புள்ளிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்படும்.
இத்திட்டம் உடற் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கும் உடல் அசைவே இல்லாமல் இருப்போர் அல்லது தீவிரமான உடல் பயிற்சிகளை மேற்கொள்ள முடியாதவர்களை ஊக்குவிக்கிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 5,000 அடிகள் நடப்போருக்கு தொடர்ந்து புள்ளிகள் வழங்கப்படும். 7,500 மற்றும் 10,000 அன்றாட அடி பதிவுக்கான வெகுமதி நீக்கப்படுகிறது.
குடியிருப்பாளர்கள் எந்த நேரத்திலும் பதிவு செய்யக்கூடிய இந்த சவாலில் ஜனவரி மாதம் வரை ஏறக்குறைய 700,000 பேர் பதிவு செய்துள்ளதாக வாரியம் குறிப்பிட்டது.
மூத்த சுகாதார நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம், புக்கிட் பாத்தோக் ஈஸ்டில் நேற்று நடந்த நடைப்பயிற்சி சமூக நிகழ்வில் இந்தப் புதிய மாற்றங்களை அறிவித்தார். “வருமுன் காக்கும் மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி வழிவகுக்கும் வகையில் அறிமுகமாகும் அதிக உடற் பயிற்சித் திட்டங்களும் தேசிய நடை சவாலில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களும் அதிகமான சிங்கப்பூரர்கள் துடிப்போடு இருக்கவும், மேம்பட்ட உடல்நலத்திற்கு தேசிய அளவில் பரிந்துரைக்கப்பட்ட உடல் அசைவு நிலையை எட்டவும் தூண்டும்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
குறிப்பாக, பெரியோர் வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடம் மிதமான மற்றும் தீவிரமான உடல் செயல்பாடுகளில் ஈடுபட பரிந்துரைக்கப்படுகிறது. இது அகால மரணம், இதய நோய், 2வது வகை நீரிழிவு, மன அழுத்தம், பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், பெருங்குடல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் போன்றவை ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது.
சுகாதார மேம்பாட்டு வாரியம்