தமிழ்ச் சமூகத்திற்கு தமிழ்மொழியே முக்கிய அடித்தளமாக விளங்குகிறது என்றும் நம்முடையது மொழி சார்ந்த கலாசாரம் என்றும் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்து இருக்கிறார்.
“ஒவ்வோர் ஆண்டும் ஒரு மாதம் முழுவதும் தமிழ் மொழிக்காக நாம் கொண்டாடும் இவ்விழா சிங்கப்பூரில் மட்டுமல்லாது அனைத்துலக அளவிலும் புகழ்பெற்றிருக்கிறது. இது நம் சமூகத்திற்கு கூடுதல் சிறப்பு,” என்று இவ்வாண்டு தமிழ்மொழி விழாவின் தொடக்கநிகழ்ச்சிக்கு முன்னதாக சனிக்கிழமை (ஏப்ரல் 1) திரு சண்முகம் செய்தியாளர்களிடம் கூறினார்.
இளையர்களிடம் தமிழைக் கொண்டுசெல்லவும் தமிழ்மீது ஆர்வத்தையும் பற்றையும் மேலோங்க வைக்கும் நோக்கிலும் கடந்த 17 ஆண்டுகளாக வளர்தமிழ் இயக்கம் தமிழ்மொழி விழாவைச் சிறப்பாக நடத்தி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தமிழ் மொழியைக் காக்கவும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லவும் இந்த விழாவை நாம் தொடர்ந்து நடத்துவது நம்முடைய முக்கியப் பணி என்ற அவர், தமிழ் மொழி விழா நிகழ்ச்சிகளில் நாம் அனைவரும் பங்கெடுப்பது மிகவும் முக்கியம் என்றும் கேட்டுக்கொண்டார்.
கொவிட்-19 கிருமித்தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள் முழுவதுமாக தளர்த்தப்பட்ட நிலையில் தமிழ் மொழி விழா 2023 இவ்வாண்டு முற்றிலுமாக நேரடியாக நடைபெறவுள்ளது. ‘அழகு’ என்பது இவ்வாண்டு விழாவின் கருப்பொருள்.
‘தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம்’ என்ற குறிக்கோளையொட்டி இவ்வாண்டு 43 பங்காளித்துவ அமைப்புகள் 42 நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளன. இலக்கியம், கலை, கலாசாரம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் இம்மாதம் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதிவரை நடைபெறும்.
மேலும், தமிழ் முரசு நாளிதழ் உட்பட மூன்று புதிய பங்காளி அமைப்புகள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் இவ்வாண்டு இணைந்துள்ளன.
“எளிய முறையில் இளையர்களிடம் தமிழைக் கொண்டு செல்ல ‘அழகு’, ‘அன்பு’ எனும் புதிய உருவச் சின்னங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன,” என்று வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் சு. மனோகரன் கூறினார்.