ஜூன் மாத பள்ளி விடுமுறையில் பிள்ளைகளுடன் சேர்ந்து நீங்களும் உங்களைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
சிலர் வெளி நாடுகளுக்குச் செல்ல விரும்புவார்கள். இந்தத் திட்டத்தில் பெரும்பாலோனோர் அண்டை நாடான மலேசியாவிற்குச் செல்ல முடிவு எடுத்து இருப்பீர்கள். செல்லும் முன் போக்குவரத்து நெரிசலைப் பற்றி நன்கு அறிந்துகொண்டு செல்லுங்கள்.
போக்குவரத்து நெரிசல் இருக்கும் நேரத்தில் சென்றால் பிள்ளைகளுக்கு அந்த இனிமை யான பொழுது வீணாகிவிடும்.
ஒரு சிலர் சிங்கப்பூரிலேயே விடுமுறையைக் கழிக்க முடிவு எடுத்திருப்பீர்கள்.
பல நடவடிக்கைகள் உங்கள் இல்லங்களுக்கு அருகிலேயே நடக்கும். செந்தோசா தீவில் உள்ள கடல்வாழ் மீன் காட்சியகத்திலும் ‘கோவ் வாட்டர் பார்க்’கிலும் பல நடவடிக்கை களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன.
சாங்கி விமான நிலையத்தில் ‘ஜுவல்’ என்னும் பகுதி புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது. சுமார் 1.7 பில்லியன் செலவில் 2,000 மரங்களும் 100,000 மூலிகைச் செடிகளும் பார்ப்பதற்கு பச்சைப் பசேல் என்று உங்கள் கண்களுக்கு விருந்தாக இருக்கும்.
சுமார் 14,000 சதுர அளவிலான கெனப்பி பூங்காவும் திறக்கப்பட்டு உள்ளது.
இரு சிக்கல் பாதைகள் (mazes), இரு வான் வலைகள் (sky nets), கெனப்பி பாலம் (canopy bridge) ஆகியவற்றுடன் பல சுவாரசியமான அம்சங்கள் இப்பூங்காவில் உள்ளன.
வான் வலைகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குதித்து விளையாடலாம். சிறுவர்களுடன் குதிக்கும்போது பெரியவர்களும் சிறியவர்களாக மாறிய அனுபவம் கிடைக்கும். பலவகையான உணவு கடைகளும் அங்கு உள்ளன.