கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழலில் ஈராண்டுகளுக்குப் பிறகு உலகம் படிப்படியாக வழக்கநிலைக்குத் திரும்பிவரும் வேளையில், ஆப்பிள், கூகல் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்குத் திரும்ப அழைக்கின்றன.
பெரும்பாலான வேலை நாள்களில் பணியிடம் திரும்ப ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக அந்நிறுவனங்கள் புதுப்புது திட்டங்களை வகுத்து வருகின்றன. எனினும், இப்புதிய கொள்கை பற்றி ஊழியர்கள் திருப்தியுடன் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆப்பிள் நிறுவன ஊழியர்களில் கிட்டத்தட்ட முக்கால்வாசிப் பேர், அலுவலகத்திற்குத் திரும்ப விரும்பவில்லை எனத் தெரிகிறது. தற்போது வாரத்திற்கு ஒருமுறையாவது ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்று ஆப்பிள் கோருகிறது. மே 23ஆம் தேதிமுதல், வாரத்தில் குறைந்தது மூன்று நாளாவது அலுவலத்திற்கு வரவேண்டும் என்று ஆப்பிள் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இது, ஊழியர்களை மேலும் வெறுப்படையச் செய்வதாகக் கூறப்படுகிறது.
இதன் தொடர்பில் ‘பிளைண்ட்’ எனும் சமூக ஊடக நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில், அலுவலகத்திற்கு வர அழைக்கப்படுவதால் அதிருப்தி அடைந்துள்ள ஆப்பிள் ஊழியர்கள், பணியிலிருந்து விலகி நீக்குப்போக்கான வேலை ஏற்பாடு வழங்கும் வேறொரு தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர விரும்புவதாகத் தெரியவந்துள்ளது.
ஏப்ரல் 13 முதல் 19ஆம் தேதி வரை ஆப்பிள் நிறுவனத்தைச் சேர்ந்த 652 ஊழியர்களிடமிருந்து கருத்துகளை தான் சேகரித்ததாக ‘பிளைண்ட்’ கூறியது.
ஏப்ரல் நடுப்பகுதி வரை, பெரும்பாலான ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் ஈராண்டுகளுக்கு மேலாக வீட்டிலிருந்து பணியாற்றி வந்துள்ளனர். அலுவலகம் வந்து செல்வதில் தாங்கள் சில சிரமங்களை எதிர்நோக்குவதாக ஊழியர்கள் கூறுகின்றனர்.
‘பிளைண்ட்’ நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, தாங்கள் அலுவலகத்திற்கு வரச் சொல்லப்படுவதால் 56 விழுக்காடு ஆப்பிள் ஊழியர்கள் பணியிலிருந்து விலகுவது பற்றி பரிசீலிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஊழியர்களின் அதிருப்தி குறித்து ஆப்பிள் நிறுவனம் இதுவரை கருத்துரைக்கவில்லை.