வேவு பார்த்த விவகாரம்: ஆடவரைத் தூக்கிலிட்ட ஈரான்

வேவு பார்த்த விவகாரம்: ஆடவரைத் தூக்கிலிட்ட ஈரான்

1 mins read
c04ff3fa-88f7-4bb7-bd7e-bbfd1f5f1d25
அம்னெஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளின் கூற்றுப்படி, உலகிலேயே சீனாவிற்கு அடுத்தபடியாக ஈரானில்தான் மிக அதிக அளவில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன. - படம்: இபிஏ

தெஹ்ரான்: ஈரானின் தற்காப்பு ரகசியங்களை வேவு பார்த்து, எதிரி நாட்டிற்குத் தெரிவித்த குற்றத்திற்காக மொஜ்தாபா கியான் எனும் ஆடவரை ஞாயிற்றுக்கிழமை (மே 24) அதிகாலை ஈரான் தூக்கிலிட்டது.

இஸ்ரேல், அமெரிக்காவுடன் ஈரான் போரிட்ட வேளையில் அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாக அந்நாட்டு நீதித் துறை தெரிவித்தது.

அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகளின் வான்வழித் தாக்குதலில் ஈரானின் மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பிப்ரவரி 28ஆம் தேதி இப்பகுதியில் போர் வெடித்தது.

அதனைத் தொடர்ந்து, அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்கள், வேவுப் பார்த்தவர்கள் ஆகியோரை ஈரான் தூக்கிலிட்டது. அவர்கள் அனைவரும் போருக்கு முன்னதாக அந்நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

போர்க்காலத்தில் உளவு பார்த்த குற்றத்திற்காக ஈரானில் நிறைவேற்றப்பட்ட முதல் மரண தண்டனை இதுவாகும்.

ஈரான் நீதித்துறையின் அதிகாரபூர்வ இணையத்தள அறிக்கையின்படி, ஈரானின் ஆயுதத் தயாரிப்பு ஆலைகளின் இருப்பிடங்கள், உதிரிப் பாகங்கள் உற்பத்தி செய்யும் உள்கட்டமைப்பு வசதிகள் சார்ந்த மிக முக்கிய ரகசியங்களைத் திரட்டி, வெளிநாட்டுச் செயற்கைக்கோள் தொலைக்காட்சி கட்டமைப்பு வழியாக எதிரி நாடுகளுக்கு கியான் அனுப்பியுள்ளார்.

அவர் அனுப்பிய உளவுத் தகவல்களின் அடிப்படையில், ஈரானில் உள்ள ஒரு முக்கிய ராணுவ இலக்கின்மீது போர் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் எதிரி நாடுகள் துல்லியமான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளதாக ஈரான் அரசுத் தரப்பு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்