புடாபெஸ்ட்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டோனல்ட் டிரம்ப் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, ஐரோப்பாவின் பொருளியலைச் சீரமைப்பது மேலும் உடனடித் தேவையாகிவிட்டது.
புடாபெஸ்ட்டில் அந்தச் சவாலைச் சமாளிப்பதன் தொடர்பில் நடைபெறும் பேச்சுகளை முன்னிட்டு, சிறப்பு அறிக்கை ஒன்றின் எழுத்தாளர் மாரியோ டிராகி அந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
டிரம்ப் மீண்டும் அதிபராகவிருப்பதால், அவர் விடுத்திருக்கும் மிரட்டல்களை நிறைவேற்றி, வரியை உயர்த்தினால், ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளியலுக்கு ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து அதிகாரிகள் முழு விழிப்புநிலையில் உள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயென் அடுத்த ஐந்தாண்டுகளுக்குப் பயன்படுத்தக்கூடிய பொருளியல் அறிக்கையை தயார்செய்யும் பொறுப்பு ஐரோப்பிய மத்திய வங்கியின் முன்னாள் தலைவருமான டிராகியிடம் கொடுக்கப்பட்டது.
செப்டம்பரில் வெளியான அந்த அறிக்கையில், அமெரிக்காவின் வேகத்திற்கு ஏற்ப ஐரோப்பா செயல்படத் தவறியது குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் குறைவான உற்பத்தித் திறனும் பொருளியல் மெதுவடைதலும் கோடிகாட்டப்பட்டது.
“இன்றைய பொருளியல் சூழலை எடுத்துக்கொண்டால், இந்த அறிக்கையில் கூறப்படும் பரிந்துரைகள் உடனடியானத் தேவை. அமெரிக்கத் தேர்தலுக்குப் பிறகு, இவற்றை மேலும் உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்,” என்று திரு டிராகி கூறினார்.

