ஈரானியத் தலைநகர் டெஹ்ரானில் இருந்து கடந்த வாரம் புதன்கிழமை புறப்பட்ட உக்ரேனிய பயணிகள் விமானத்தை இரு ஏவுகணைகள் சுட்டுவீழ்த்தியதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
பாதுகாப்புக் கேமராக்களின் காணொளிப் பதிவை உறுதிசெய்த பின் அந்தத் தகவலை அந்நாளிதழ் வெளியிட்டது.
ஏவுகணை ஒன்று பாய்ச்சப்பட்ட 30 வினாடிகள் கழித்து மற்றோர் ஏவுகணை பாய்ச்சப்பட்டது அந்தக் காணொளிப் பதிவில் தெரியவந்துள்ளது. பறந்துகொண்டிருந்த அந்த விமானத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஈரானிய ராணுவத் தளத்திலிருந்து அவ்விரு ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டன.
தீப்பற்றிய அந்த விமானம், டெஹ்ரான் அனைத்துலக விமான நிலையத்திற்குத் திரும்ப முயற்சி மேற்கொள்வதை அக்காணொளிப் பதிவு காட்டியது.
ஆனால், ஒரு சில நிமிடங்களில் விமானம் வெடித்துச் சிதறியது அந்தக் காணொணிப் பதிவில் தெரிந்தது.
இதற்கிடையே, உக்ரேனிய விமானம் ஏவுகணையால் சுட்டுவீழ்த்தப்படுவதை வேறொரு காணொளி எடுத்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட அந்த நபர்மீது தேச பாதுகாப்பு குறித்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
காணொளி எடுத்த அந்த நபரை ஈரானிய புரட்சிப் படையினர் தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததைத் தொடர்ந்து அந்நாடு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
விசாரணையின் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று புரட்சிப் படை அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்தார்.
ஆனால், காணொளியை இணையத்தில் முதலில் பதிவிட்ட லண்டனில் இருக்கும் ஈரானியப் பத்திரிகையாளர், தமக்கு அந்தக் காணொளியை அனுப்பிய நபர் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஈரானிய அதிகாரிகள் தவறான நபரை கைது செய்துள்ளதாகவும் கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெஹ்ரானில் இருந்து புறப்பட்ட பிஎஸ்752 விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதில் அதிலிருந்த 176 பேரும் உயிரிழந்தனர்.
அந்த விமானம் தவறுதலாக சுடப்பட்டதாக கூறிய ஈரான், இந்தச் சம்பவம் தொடர்பாக பலரைத் தான் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சிறப்பு நீதிமன்றம் ஒன்றில் இந்தச் சம்பவம் குறித்த விரிவான விசாரணை நடைபெறும் என ஈரானிய அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறியிருக்கிறார்.
“இது ஒரு சாதாரண வழக்காக இருக்காது. ஒட்டுமொத்த உலகமும் இந்த விசாரணையை அணுக்கமாகக் கவனிக்கும்,” என்று அவர் கருத்துரைத்தார்.
#தமிழ்முரசு