கலிஃபோர்னியா: கலிஃபோர்னியாவில் காளான் உணவு சாப்பிட்டு ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அம்மாநில அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சிலவகைக் காளான்களில் நச்சுத்தன்மை இருப்பதாகவும் சிலருக்குக் கல்லீரல் பாதிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அத்தகைய காளான்களில் அமாடாக்சின் நச்சுப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தொடர்பில் ஒருவர் உயிரிழந்ததையும் 21 பேர் பாதிக்கப்பட்டதையும் அதிகாரிகள் கண்டுபிடித்து, நச்சு பாதிப்புகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
நவம்பர் நடுப்பகுதியிலிருந்து டிசம்பர் முற்பகுதி வரை நச்சுக் காளான்களை உட்கொண்டதால் இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டதாக கலிஃபோர்னியா பொதுச் சுகாதாரப் பிரிவு டிசம்பர் 5ஆம் தேதி தெரிவித்தது.
‘டெத் கேப்’ காளான்களில் நச்சு அதிகமுள்ளது. இதனைச் சாப்பிட்டால் கல்லீரலும் சிறுநீரகச் செயல்பாடும் பாதிக்கப்படக்கூடும்.
இந்த வகை காளான்கள் கலிபோர்னியாவில் அதிகமுள்ளன. மோன்டேரே மற்றும் சான்ஃபிரான்சிஸ்கோ பே ஏரியாவில் குறிப்பிடத்தக்க அளவில் நச்சு பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
காட்டுக் காளான்களை உட்கொள்வதால் ஏற்படும் நோய்கள் அதிகரித்துள்ளதாக மருத்துவமனைகளும் தெரிவித்துள்ளதாக டிசம்பர் 1ஆம் தேதி மோன்டேரே கவுன்டி அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

